இந்திய பேட்மிண்டன் வீரர் சாத்விக் சாய்ராஜ் தந்தை மரணம்

மாரடைப்பால் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சாத்விக்கின் தந்தை உடல் தகனம் நாளை நடக்கிறது.
இந்திய பேட்மிண்டன் வீரர் சாத்விக் சாய்ராஜ் தந்தை மரணம்
Published on

புதுடெல்லி:

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர்களில் ஒருவரான சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, இரட்டையர் பிரிவில் சிராக் ஷெட்டியுடன் இணைந்து 2022-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு, காமன்ல்வெத் விளையாட்டு, 2023-ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி ஆகியவற்றில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இந்த இணை உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து சாதித்தது. கேல் ரத்னா விருதுக்கு தேர்வாகி இருக்கும் சாத்விக் சாய்ராஜ் இன்னும் அந்த விருதை பெறவில்லை. டெல்லியில் நடைபெறும் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் போர்டு அணிகளுக்கான பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்றுள்ள சாத்விக் கேல்ரத்னா விருதை நேற்று பெற்றுக்கொள்ள திட்டமிட்டு இருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவரது தந்தையும், முன்னாள் உடற்கல்வி ஆசிரியருமான காசி விஸ்வநாதன் (வயது 65) தனது மனைவி ரங்கமணி மற்றும் குடும்ப நண்பருடன் டெல்லி செல்வதற்காக ஆந்திர மாநிலம் அமலாபுரத்தில் இருந்து ராஜமுந்திரி விமான நிலையத்திற்கு நேற்று காலை காரில் சென்றார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அவசரமாக அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாரடைப்பால் உயிர் பிரிந்து விட்டதாக அறிவித்தனர். தகவல் அறிந்த சாத்விக் விமானம் மூலம் மாலை சொந்த ஊர் திரும்பினார். சாத்விக்கின் தந்தை உடல் தகனம் நாளை நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com