விவேகானந்தரைக் கவர்ந்த வண்டிக்காரர்

சுவாமி விவேகானந்தர் தனது சீடர்களிடம் கீழே கொடுக்கப்பட்டுள்ள சம்பவத்தை பல முறைகள் மேற்கோள் காட்டி அன்றாட வாழ்வில் ஆன்மிகத்தை கடைப்பிடிப்பதை உதாரணமாக குறிப்பிடுவது வழக்கம்.
விவேகானந்தரைக் கவர்ந்த வண்டிக்காரர்
Published on

சுவாமி விவேகானந்தர் பற்றி அனைவருமே அறிந்திருப்போம். இந்திய மண்ணின் ஆன்மிக பாரம்பரியத்தை உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக, அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த சர்வமத மாநாட்டில் பல உரைகளை ஆற்றினார். சிகாகோ நகரில் நடந்த பெரிய கண்காட்சியின் அங்கமாக சர்வ மதங்களின் உலக பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் விதத்தில் அந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அருமையான உரைகளை அதில் நிகழ்த்தி, உலகத்தின் கவனத்தை ஈர்த்தார் என்பது வரலாறு.

அதன் பின்னர் பல ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் விருந்தினராக, சமூகத்தில் புகழ் பெற்றவர்களால் அழைக்கப்பட்டார். அந்தவகையில் 1896-ம் ஆண்டு பாரீஸ் நகரத்திற்குச் சென்று ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் தியான வகுப்புகள் நடத்தினார். ஓய்வு நேரங்களில் நகர்ப்புறத்தை சுற்றிப் பார்ப்பதுடன் பல்வேறு தரப்பு மக்களுடனும் பழகி, அவர்களது வாழ்க்கை முறைகள் பற்றி அறிந்து கொள்வதும் அவரது வழக்கம்.

ஒரு முறை, வாடகைக்கு எடுக்கப்பட்ட குதிரைகள் இழுக்கும் கோச் வண்டி ஒன்றில், பாரீஸ் நகரத்தை சுற்றி பார்க்கும் விதமாக தன் சீடருடன் சென்று கொண்டிருந்தார். கோச் வண்டியை ஓட்டிச் சென்ற வண்டிக்காரர், பாதி வழியில் வசதியான உடை அணிந்த இரண்டு குழந்தைகளையும், அவர்களை அழைத்து வந்த பெண்ணையும் பார்த்தார். அவர்கள் பணக்கார வீட்டு பிள்ளைகள் போல் இருந்தார்கள்.

வண்டியை ஓர் ஓரமாக நிறுத்திய அவர், இறங்கி சென்று அந்த பிள்ளைகளை கட்டிக்கொண்டு தட்டிக்கொடுத்தார். அவர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு திரும்பி, மீண்டும் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றார். அன்றைய ஐரோப்பிய நாகரிகத்தின்படி வண்டிக்காரர் தன்னிச்சையாக வண்டியை நிறுத்துவது அநாகரிகமாக கருதப்பட்டது. அவற்றை கவனித்துக் கொண்டிருந்த விவேகானந்தரின் சீடர் “அவர்கள் யார்?” என்று கேட்டார்.

அந்தப் பிள்ளைகள் தன்னுடைய மகன் மற்றும் மகள் என்றும், அழைத்து வந்தது தனது மனைவி என்றும் வண்டிக்காரர் தெரிவித்தார்.

“அவர்களை பார்த்தால் பெரிய பணக்கார வீட்டு பிள்ளைகள்போல் இருக்கிறதே. நீங்கள் ஒரு சாதாரண கோச் வண்டியை தானே ஓட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று சீடர் வியப்புடன் கேட்டார்.

அவரை கோச் வண்டி ஓட்டுபவர் திரும்பி, கூர்ந்து கவனித்து விட்டு, பாரீஸில் பிரபலமாக இருந்த ஒரு வங்கியின் பெயரை குறிப்பிட்டு “அந்த வங்கி பற்றி ஏதாவது உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டார்.

“ஆமாம். நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அது பெரிய வங்கியாக இருந்தது. எனக்கும் கூட அதில் ஒரு கணக்கு இருந்தது. ஆனால் இப்போது அந்த வங்கி திவாலாகி விட்டது போல் தெரிகிறதே?” என்றார் சீடர்.

அதை கேட்டுவிட்டு வண்டியோட்டுபவர் அமைதியாக, “நான்தான் அந்த வங்கிக்கு சொந்தக்காரன். அந்த வங்கி இப்போது கொஞ்சம் சிரமமான நிலையில் இருக்கிறது. அதன் பங்குகளை எல்லாம் வசூல் செய்து கடன்களை எல்லாம் அடைக்க சிறிது காலம் ஆகலாம். அந்த நிலையில் மற்றவர்களுக்கு நான் எந்த விதத்திலும் சுமையாக இருக்க விரும்பவில்லை. அதனால், இந்த கிராமத்தில் உள்ள ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்தேன். என்னிடம் இருந்த சொத்துக்கள் எல்லாவற்றையும் விற்று விட்டு, ஓரளவு பிரச்சினைகளை சமாளித்தேன். தற்போது இந்த கோச் வண்டியை வாடகைக்கு ஓட்டுவதன் மூலம் குடும்ப செலவுகளை சமாளித்து கொண்டிருக்கிறேன்” என்ற வண்டிக்காரர் மேலும் தொடர்ந்தார்.

“என் மனைவியும் அவளால் இயன்ற அளவு கொஞ்சம் சம்பாதிக்கிறாள். எங்களது இருவரது வருமானத்தில் குழந்தைகளுக்கு ஆகும் செலவுகளை சரி செய்து கொண்டிருக்கிறோம். கடன்களை முற்றிலும் அடைத்தவுடன், மீண்டும் வங்கியை திறந்துவிடுவேன்” என்றார் வண்டிக்காரர்.

நடந்தவை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த சுவாமி விவேகானந்தர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். “ஆகா..! இந்த மனிதர் அல்லவா உண்மையான வேதாந்தி! அன்றாட வாழ்வில் வேதாந்த கருத்தை நடைமுறைப்படுத்தி வரும் இவரது தன்னம்பிக்கை நிச்சயம் போற்றுதலுக்கு உரியது. பெரிய அந்தஸ்தில் இருந்து விழுந்தும்கூட, அவர் சூழ்நிலை கைதியாக மாறிவிடவில்லை. என்ன ஒரு ஆச்சரியம்..! இவரே உண்மையான வேதாந்தி” என்று வாழ்த்தியதுடன் அவரது வீட்டுக்கும் சென்று அவரை பெருமைப்படுத்தினார்.

சுவாமி விவேகானந்தர் தனது சீடர்களிடம் இந்த சம்பவத்தை பல முறைகள் மேற்கோள் காட்டி அன்றாட வாழ்வில் ஆன்மிகத்தை கடைப்பிடிப்பதை உதாரணமாக குறிப்பிடுவது வழக்கம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com