சென்னை கிண்டி, எம்.கே.என். சாலையில் அமைந்திருக்கிறது அருள்மிகு வீரஆஞ்சநேயர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் அனுமன், ஸ்ரீமத்வரின் சீடர் பரம்பரையில் தோன்றிய ஸ்ரீவியாஸராயரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்.
இந்த கோவிலில் உள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேய ஸ்வாமிக்கு ஒன்பது வியாழக்கிழமைகள் தொடர்ந்து வெற்றிலை மாலை அணிவித்து, அர்ச்சனை செய்து, கோயிலில் இருக்கும் அணையா விளக்கில் நெய் சேர்த்து, ஒன்பது முறை கோயில் முழுவதும் வலம் வந்து வழிபட வேண்டும். ஒன்பதாவது வாரம் சுவாமிக்கு வடை மாலை சாத்தி, ஜாதகத்தை சுவாமி திருவடியில் வைத்துச் சமர்ப்பித்தால் உடனே திருமணம் கூடி வருவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
அமாவாசை தினங்களில், இந்தக் கோயிலில் அருளும் அனைத்து தெய்வங்களையும் ஒருசேர 48 முறை வலம்வந்து, சுவாமி திருவடியில் தேங்காய் மற்றும் எலுமிச்சைப்பழம் வைத்து வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள். அனுமத் ஜயந்தி, ஸ்ரீராமநவமி, வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.