

வலம்புரிச் சங்கு, சாளக்ராம மூர்த்தம், ருத்ராட்சம், விநாயகர் ஆகிய நான்கு தேவதா சொரூபங்களும், எந்தவிதமான பிரதிஷ்டா நியமங்களும் இல்லாமலேயே தன்னியல்பான தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தக்கூடிய இறையம்சம் பெற்றவை என்கின்றன புராணங்கள்.
இவைகளில் வலம்புரிச்சங்கு முதலிடத்தைப் பெறுவதற்கு அதன் மகத்துவமே காரணமாகும். இச்சங்கு இயல்பிலேயே ஓம்கார நாதத்தை வெளிப்படுத்தக் கூடியதாகும். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது, பதினாறு வகையான தெய்வீகப் பொருட்கள் வெளிவந்தன.
அவற்றுள் வலம்புரிச் சங்கும், திருமகளும் அடுத்தடுத்து வர, மகாவிஷ்ணு இடக்கையில் சங்கையும் வலக்கையில் தேவியையும் எடுத்துக்கொண்டார். தேவியுடன் சேர்ந்து வந்ததால் இந்தச் சங்கு மகாலட்சுமியின் அம்சம் என்றும் கூறப்படுவதுண்டு.