

வலம்புரிச்சங்கு ஐஸ்வர்யம், வீரம், மங்கலம் இவற்றைப் பிரதிபலிக்கும் பொருளாக அமைகிறது. இதில் லட்சுமி, குபேரன் ஆகியோர் வாசம் செய்கிறார்கள். இதை வைத்துப் பூஜை செய்ய, இல்லத்தில் சுபீட்சம் பெருகும். வியாதிகள் நீங்கும்.
ஆயிரம் சிப்பிகளுக்கு நடுவில் ஒரு மட்டியும், ஆயிரம் மட்டி களுக்கு நடுவில் ஒரு இடம்புரிச் சங்கும் (வாமாவர்த்தி சங்கு), ஆயிரம் இடம்புரிச் சங்குகளுக்கு நடுவில் ஒரு வலம்புரிச் சங்கும் (தட்சிணவர்த்தி சங்கு), ஆயிரம் வலம்புரிச் சங்குகளுக்கு நடுவில் ஒரு சலஞ்சல சங்கும், ஆயிரம் சலஞ்சல சங்குகளுக்கு நடுவில் ஒரு பாஞ்சஜன்ய சங்கும் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
இவைகளில் சலஞ்சலம், பாஞ்சஜன்யம் ஆகியவற்றை யாரும் பார்த்ததில்லை. பாஞ்சஜன்யம் ஸ்ரீகிருஷ்ணர் தன் கையில் வைத்திருந்த அபூர்வ வகை சங்காகும். ஒரு வலம்புரி சங்கு, கோடி இடம்புரி சங்குகளுக்கு சமம் என்பதால், வலம்புரி சங்கினால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.