கார்த்திகை பிரம்மோற்சவம்: பல்லக்கு, யானை வாகனங்களில் பத்மாவதி தாயார் வீதிஉலா

திருச்சானூர் கோவிலில் நடந்து வரும் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் யானை வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
உற்சவர் பத்மாவதி தாயார் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.
உற்சவர் பத்மாவதி தாயார் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.
Published on

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை, “மோகினி அலங்காரத்தில்” பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அதைத்தொடர்ந்து மதியம் 12.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணிவரை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம், மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஆஸ்தான மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

இதையடுத்து இரவு 7.30 மணியில் இருந்து 10 மணிவரை யானை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, “கஜேந்திர மோட்சத்தை” உணர்த்தி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 6-வதுநாளான இன்று (வியாழக்கிழமை) காலை சர்வ பூபால வாகன வீதிஉலா, மாலை தங்கத்தேரோட்டம், இரவு கருட வாகன வீதிஉலா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com