திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் 29-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வரும் 29-ந்தேதி (வெள்ளிக் கிழமை) சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் 29-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு
Published on

108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் தொன்மை வாய்ந்தது சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில். பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இந்த கோவில்களில் உள்ள பெருமானை வழிபட்டு உள்ளனர்.

பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19-ந்தேதி பகல்பத்து முதல் திருநாள் வேங்கட கிருஷ்ணன் திருக்கோலத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வருகிற 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் காலை 4 மணிக்கு உள்பிரகார புறப்பாடும், காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.

இதனைத்தொடர்ந்து வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபனுக்கு மரியாதை செய்யப்படுகிறது. தொடர்ந்து அன்று இரவு 11.30 மணி வரை மூலவர் தரிசனம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு பார்த்தசாரதி சாமி உற்சவர் நம்மாழ்வாருடன் பெரியவீதி புறப்பாடு நடக்கிறது. அன்று அன்னதானம் வழங்கப்படுகிறது. வரும் 30-ந்தேதி முதல் ஜனவரி 6-ந்தேதி வரை மாலை 6 மணிக்கும், 7-ந்தேதி காலை 9 மணிக்கும் சொர்க்கவாசல் தரிசனம் நடக்கிறது.

சொர்க்கவாசல் திறப்பையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்கள் தெரிந்து கொள்வதற்காக செல்லும் வழிகள், வெளியேறும் வழிகள் ஆகிய விவரங்கள் அடங்கிய வரைப்படம் தென்மாட வீதியில் அமைந்துள்ள கோவில் நூலகத்தின் அருகில் வைக்கப்பட உள்ளது.

கோவிலுக்கு வெளியே கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை பக்தர்கள் கண்டு களிக்கும் வகையில், எல்.இ.டி., திரைகள் அமைக்கப்படுகிறது. மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும், தெற்கு ரெயில்வே மூலம் சிறப்பு ரெயில்களும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் பாதுகாப்புக்காக 4 மாட வீதிகளிலும் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுவதுடன், கோவில் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படுகிறது.

பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம், ஆன்மிக புத்தகம் கோவில் வளாகத்தில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அத்துடன் கோவில் வரலாறு அடங்கிய சிற்றட்டை, ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் படம், அர்ச்சனை செய்யப்பட்ட குங்குமம், கற்கண்டு ஆகியவை வழங்கப்பட உள்ளது.

விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மு.ஜோதிலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com