திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் தேரோட்டம்

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் தேரோட்டம்
Published on

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற ஒப்பிலியப்பன் கோவில் உள்ளது. நம்மாழ்வார் திருமங்கை ஆழ்வார் பொய்கையாழ்வார் பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த கோவில் பூலோக வைகுண்டம் திருவிண்ணகரம் தமிழக திருப்பதி என்று போற்றப்படுகிறது. இந்த கோவிலில் உள்ள வெங்கடாஜலபதியை தினமும் ஏராளமான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் பெருமாள், தாயார் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. விழாவில் உற்சவர் பொன்னப்பன் பூமிதேவி தேசிகனோடு சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பின் தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. தவமணி, திருபுவனம் சோழன் கூட்டுறவு சங்க துணை தலைவர் எஸ். வைரவேல், திருநாகேஸ்வரம் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் (சார்பு) மாதவன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் செ. மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com