

அறுபது வயது வந்த தம்பதியர்கள், மணிவிழாச் செய்து கொள்வது வழக்கம். அவரவர்களின் ராசிக்கேற்ப சிலர் வீடுகளில் செய்து கொள்வர். சிலர் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் செய்து கொள்வார்கள். அப்படி ஆலயங்களில் வைத்து மணி விழாவை நடத்துபவர்கள், திருக்கடவூர் திருத்தலத்தில் செய்து கொண்டால் ஆயுள் நீடிப்பு உண்டாகும். ‘கடம்’ என்றால் ‘குடம்’ என்று பொருள்.
அமிர்தகுடத்தை அருளிய அமிர்தகடேஸ்வரர் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். அன்னையின் திருநாமம், அபிராமி அம்மன் என்பதாகும். ‘என்றும் பதினாறு’ என்ற வரம் பெற்ற மார்க்கண்டேயனின் உயிரைக் காக்க இறைவன் திருவிளையாடல் நடத்திய தலம் இது. அபிராமி பட்டருக்காக அமாவாசையன்று முழுநிலவு வந்ததும் இங்குதான். இந்த கிடைத்தற்கரிய பெருமைபெற்ற திருத்தலத்தில் மணிவிழா செய்து கொண்டால், மங்கல நிகழ்வுகள் வாழ்வில் பெருகும்.