

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் நிறை புத்தரிசி பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜை இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
இதையொட்டி அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்களை அறுவடை செய்து சன்னதி தெருவில் உள்ள விநாயகர் கோவிலுக்கு கொண்டு வரப்படும். பின்னர், அங்கிருந்து மேளதாளத்துடன் அதிகாலை 5.30 மணிக்கு ஊர்வலமாக கொண்டு வந்து தாணுமாலயசாமி சன்னதியில் வைத்து நிறை புத்தரிசி பூஜை நடக்கிறது.
இதையடுத்து அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். பக்தர்கள் அந்த நெற்கதிர்களை தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்வார்கள். அந்த நெற்கதிர்களை கொண்டு சென்றால்“நெற்கதிர்கள் செழித்து வளர்வது போன்று தங்கள் வாழ்வும் செழிப்படையும்“ என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
இதேபோல் கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில், மண்டைக்காடு பகவதியம்மன் கோவில், பூதபாண்டி பூதலிங்கசாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அனைத்து கோவில்களிலும் நிறை புத்தரிசி பூஜை நடைபெறுவதுடன் தைபூச விழாவும் நடைபெறுகிறது.