சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் நிறை புத்தரிசி பூஜை

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜை நடந்தது. தற்போது கொரோனா தடுப்பு ஊரடங்கு அமலில் உள்ளதால் பக்தர்கள் இன்றி பூஜை நடைபெற்றது.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில்
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில்
Published on

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நிறைபுத்தரிசி பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்களை அறுவடை செய்து சன்னதி தெருவில் விநாயகர் கோவிலுக்கு கொண்டு வந்து, அங்கிருந்து மேளதாளத்துடன் தாணுமாலயசாமி சன்னதிக்கு எடுத்து வருவார்கள்.

பின்னர் பூஜைகள் நடந்த பிறகு, அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த நெற்கதிர்களை வீடுகளுக்கு கொண்டு சென்றால் தங்கள் வாழ்வு செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த ஆண்டு நிறை புத்தரிசி பூஜை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது.

தற்போது கொரோனா தடுப்பு ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. எனவே, பக்தர்கள் இன்றி பூஜை நடைபெற்றது.  இதில் கோவில் மேல்சாந்தி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com