

பணகுடி அருகே உள்ள கலந்தபனை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா நேற்று கால்நாட்டி தொடங்கப்பட்டது. இதையொட்டி காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம், சிறப்பு தீபாராதனை, அபிஷேகம் ஆகியவை நடந்தது. பின்னர் கால்நாட்டு விழா, காப்பு காட்டுதலும், மதியம் அன்னதானமும் நடந்தது.
தொடர்ந்து வருகிற 12-ந்தேதி வரை விழா நடக்கிறது. ஒவ்வொரு நாளும் மதியம் அன்னதானமும், இரவு 7 மணிக்கு அபிஷேக பூஜைகளும், இரவு 8 மணிக்கு சமய சொற்பொழிவு, பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
11-ந்தேதி சுடலை ஆண்டவர் கொடை விழா நடக்கிறது. காலை 7 மணிக்கு பக்தர்கள் கன்னியாகுமரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், 10 மணிக்கு பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து சுடலை ஆண்டவர் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வருதலும், பாலாபிஷேகமும், மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், அதன்பின் அன்னதானமும், இரவு 7 மணிக்கு நட்சத்திர கலை இரவு விழாவும், இரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது.
12-ந்தேதி காலை 8 மணிக்கு பொங்கல் வழிபாடு, மதியம் அன்னதானம், மதியம் 2 மணிக்கு சுவாமி திருவீதி உலா ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா தங்கவேலு, நிகழ்ச்சி அமைப்பாளர்கள் டாக்டர் முத்துகிருஷ்ணன், கண்ணன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.