

கால பைரவரோடு இருக்கும் நான்கு நாய்களையும் நான்கு வேதங்களாக கூறுவர். சிவன் ஒவ்வொரு கால கட்டத்திலேயும் தன்னை ஒவ்வொரு ரூபத்தில் வெளிப்படுத்தி பக்தர்களுக்கு அருள்புரிகிறார். அவ்வாறு அவர் காட்சி தந்த ரூபமே காலபைரவ மூர்த்தி ரூபமாகும். இப்படித் தோன்றிய சிவன் ‘சண்டாளர்’ எனப்படுகிறார். சண்டாளர் என்றால், மக்களின் கொலை பாதக உணர்வுகளை விரட்டக்கூடியவர் என்று பொருள்.
இப்பைரவ மூர்த்தி சிவாலயங்களில் காவல் தெய்வமாக நியமிக்கப்பட்டவர். வழிபாடு முடிந்து சிவாலயம் மூடப்பட்டு தாழிட்ட பிறகு, அக்கோவிலின் சாவியை பைரவமூர்த்தி சந்நிதியில் வைப்பது காலங்காலமாக இருந்துவரும் வழக்கம். சனீஸ்வரின் குருநாதர் இவர்.
காசியில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டாராம் சனீஸ்வரன். அவர் காசியில் காவல் தெய்வமான காலபைரவரை நோக்கி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தவம் செய்தார். இறுதியில் பைரவர் காட்சி தந்து அவருக்கு மெய்ஞானம் அருளினார் என்கிறது காசி புராணம். சிவாகமங்கள், பைரவக் கோலங்கள் 64 என்கின்றன.
இவற்றில் எட்டு வகையான பைரவக் கோலங்கள் மிகவும் சிறப்பானவை. சில சிவாலயங்களில் பைரவரும் சனீஸ்வரனும் அருகருகே காட்சி தருவார்கள். இவர்களை அஷ்டமியிலும் (தேய்பிறை) சனிக்கிழமைகளிலும் அர்ச்சித்து வழிபடுவது சிறப்பு. இவ்வாறு வழிபடுவதால், விரோதிகளால் ஏற்படும் தொல்லை, ஏவல், பில்லி, சூனியம், சனிதோஷம் போன்றவை நீங்கும் என்று கூறப்படுகிறது.
பைரவக் கோலங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று ஜோதிட நூல்களில் குறிப்பிடப்படுபவர் காலபைரவர். இவரை கால புருஷர், பிரம்ம சிரச்சேதர் என்றும் கூறுவர். ஜோதிட நூல்கள் இவரை காலமே உருவமான கடவுள் என்கின்றன. 12 ராசிகளும் இவர் உடம்பின் பகுதிகளாகும்.