அனைத்து தோஷங்களையும் நீங்கும் சிங்கிரிகுடி நரசிம்மர்

சிங்கிரிகுடி நரசிம்மர் கோவிலில் மன அமைதி வேண்டியும், கடன் தொல்லை, கிரக தோஷம், திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் பக்தர்கள் தாயாருக்கு நெய் விளக்கேற்றி பிரார்த்தனை செய்கின்றனர்.
அனைத்து தோஷங்களையும்  நீங்கும் சிங்கிரிகுடி நரசிம்மர்
Published on

தன் பக்தன் பிரகலாதன், அவனது தந்தை இரணியனால் கொடுமைப்படுத்தப்படுவதை அறிந்த திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அவனைக் கொன்றார். அவர் 16 கைகளுடன் சிங்கிரிகுடி தலத்தில் எழுந்தருளியுள்ளார்.

அவரது கோபத்தை தணிக்கும் வகையில் நரசிம்மரின் இடப்புறம் இரணியனின் மனைவி நீலாவதி, வலதுபுறம் மூன்று அசுரர்கள், பிரகலாதன், சுக்கிரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர். வடக்கு நோக்கியபடி யோக நரசிம்மர், பாலநரசிம்மர் உள்ளனர். இவ்வாறு ஒரே கருவறையில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பது சிறப்பாகும்.

உற்சவர் பிரகலாத வரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். நரசிம்மர் கைகளில் பிரயோக சக்கரம், குத்து கத்தி, பாணம், சங்கு, வில், கதை, கேடயம், வெட்டப்பட்ட தலை ஆகியவற்றை ஏந்தியுள்ளார். மற்ற கைகள் இரணியனை வதம் செய்த நிலையில் உள்ளது.

இங்கு லட்சுமி தேவி, கனகவல்லித்தாயார் என்ற பெயருடன் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். ‘கனகா’ என்றால் ‘தங்கம்’ என்று அர்த்தம். செல்வத்தையும், சுமங்கலி பாக்கியத்தையும் அள்ளித்தரும், தங்க மனம் கொண்ட இந்த தாயாருக்கு வெள்ளிக்கிழமையில் நெய் தீபமேற்றி வழிபட்டால் விருப்பங்கள் எல்லாம் விரைவில் நிறைவேறும்.

லட்சுமியின் அம்சமான வில்வமரம் இங்கு தல விருட்சமாக உள்ளது. திருவிழா காலத்தில் கோவிலின் பின்புறம் உள்ள பத்து தூண் மண்டபத்தில் தாயாருக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com