துன்பங்களை போக்கும் சிவபுராணம்

சிவபெருமானுக்கு உகந்த இந்த சிவபுராணத்தை தினமும் அல்லது பிரதோஷ நாட்களில் சொல்லி சிவபெருமானை வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
துன்பங்களை போக்கும் சிவபுராணம்
Published on

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

கோகழி யாண்ட குருமனிதன் தாள் வாழ்க

ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள் வாழ்க

ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க

வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க

புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க

கரம் குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க

சிரம் குவிவார் ஊங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க

ஈசனடி போற்றி எந்தையடி போற்றி

தேசனடி போற்றி சிவன்சே வடி போற்றி

நேயத்தே நின்ற நிமல னடி போற்றி

மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி

சீரார் பெருந்துறைநந் தேவனடி போற்றி

ஆராத இன்பம் அருளுமலை போற்றி

சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்

அவனரு ளாளே அவன்றாள் வணங்கிச்

சிந்தைமகிழச் சிவபுரா ணந்தன்னை

முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பனயான்

கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி

எண்ணுதற் கெட்டா எழிலாற் கழலிறைஞ்சி

விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்

எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்

பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லா அ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்

உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா எனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே

வெய்யாய் தணியாய் இயமானன் ஆம் விமலா

பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி

மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே

எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே

அஞ்ஞானந் தன்னை அகல்விக்கும் நல்லறிவே

ஆக்கம் அளவிறுதி யில்லாய் அனைத்துலகும்

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்

போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்றொழும்பின்

நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே

மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே

கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்

சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று

பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்

நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த

மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன்றன்னை

மறைந்திட மூடிய மாய இருளை

அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்

புறத்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி

மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை

மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய

விலங்கு மனத்தால் விமலா உனக்குக்

கலந்த அன் பாகிக் கசிந்து ள்ளுருகும்

நலந்தா னிலாத சிறியேற்கு நல்கி

நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

தேசனே தேனார் அமுதே சிவபுரனே

பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே

நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப்

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே

ஆரா வமுதே அளவிளாப் பெம்மானே

ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே

நீரா யுருக்கியென் ஆருயிராய் நின்றானே

இன்பமும் துன்பமும் இல்லானே யுள்ளானே

அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாம்

சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே

கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே

போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே

காக்குமெங்காவலனே காண்பரிய பேரொளியே

ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக் காய் நின்ற

தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்

தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள்

ஊற்றான உண்ணா ரமுதே உடையானே

வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப

ஆற்றேன் எம் ஐயா அரனேயோ என்றென்று

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்

மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே

கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே

நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே

தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

அல்லற் பிறவி அறுப்பானே ஓ என்று

சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து!!!

திருச்சிற்றம்பலம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com