சனி தோஷம் நீங்கும் சபரிமலை தரிசனம்

சனி பகவானால் ஏற்படும் தோஷங்களுக்கு, ஐயப்பனின் அருளே போதுமானது. சனி தோஷம் நீங்க, சாஸ்தாவுக்கு நீராஞ்சன பூஜை செய்வது சிறப்பானது.
Published on

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்திற்குட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது சபரிமலை என்ற புண்ணிய ஸ்தலம். கடல்நீர் மட்டத்தில் இருந்து 914 அடி உயரத்தில் 18 மலைகளுக்கு இடையே மலையின் உச்சியில் காடுகள் சூழ ஐயப்பன் ஆலயம் அமைந்துள்ளது.

ஐயப்பனின் சன்னிதிக்கு முன்பாக ‘தத்வம்ஸி’ என்ற வடமொழிச் சொல் உள்ளது. இதற்கு ‘நீயும் ஒரு கடவுள்’ என்று பொருள். அதனால்தான் சபரிமலை பயணம் செய்யும் பக்தர்கள், அனைவரையும் சுவாமி என்று அழைக்கிறார்கள்.

ஐயப்பனுக்கு மாலை அணியும் பக்தர்கள், தங்களது தலையில் சுமந்து வரும் இருமுடியில் உள்ள தேங்காய்க்குள் அடைக்கப்பட்ட நெய் மூலவரின் விக்கிரகத்தின் மீது ஊற்றி அபிஷேகம் செய்யப்படுகிறது. பரமாத்மாவோடு (ஐயப்பன்), ஜீவாத்மா இணைவதை குறிக்கும் தத்துவமாக இதைக் கருதுகிறார்கள்.

ஒவ்வொரு நாள் இரவும் ஐயப்பன் ஆலய நடை சாத்தப்படுவதற்கு முன்பு, ‘ஹரிவராசனம்...’ என்ற பாடல் இசைக்கப்படுகிறது. இது இறைவனை உறங்கச் செய்யும் தாலாட்டுப் பாடல். இந்தப் பாடல் 32 வரிகளைக் கொண்டது. இதில் 106 சொற்களும், 352 எழுதுக்களும் உள்ளன.

சபரிமலை தர்மசாஸ்தா ஆலயத்தில் அப்பம் மற்றும் அரவணை பிரசாதமாக வழங்கப்படுகிறது. அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களால் இது செய்யப்படுகிறது. இந்தப் பிரசாதம் செய்வதற்காக, செட்டிக்குளக்கரை தேவி கோவிலில் இருந்து அரிசி வாங்குகிறார்கள்.

சபரிமலை வாசனான ஐயப்பன், சனி கிரகத்தின் தேவனாக கருதப்படுகிறார். ஆகையால் சனி பகவானால் ஏற்படும் தோஷங்களுக்கு, ஐயப்பனின் அருளே போதுமானது. சனி தோஷம் நீங்க, சாஸ்தாவுக்கு நீராஞ்சன பூஜை செய்வது சிறப்பானது. நெய் அபிஷேகமும் செய்யலாம். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com