

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவேண்டுமென்பது இந்துக்களின் ஆகம விதியாகும். அதன்படி இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் விரைவில் ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென்று பக்தர்கள் வேண்டுகோள் வைத்திருந்தனர். இதைதொடர்ந்து பரமத்தி வேலூரை சேர்ந்த பொன்னர்சங்கர் என்ற உபயதாரர் ராஜகோபுரம் கட்டித்தர முன் வந்தார். இதையொட்டி திட்ட மதிப்பீடு செய்து ரூ.2 கோடி செலவில் தரைமட்டத்தில் இருந்து 103 அடி உயரத்தில் 7 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ராஜ கோபுரத்தின் இரண்டு நிலைகள் கட்டுமான பணி நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து மூன்றாம் நிலை கட்டுவதற்காக சாரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கட்டுமானப் பணியின் மேற்பார்வையாளர் முருகன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து கட்டுமானபணிகளுக்கு தேவையான சவுக்கு கம்புகள், செங்கல், மணல், ஜல்லி, சிமெண்டு போன்ற பொருட்கள் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.