சத்குரு: காவி நிறத்தின் பொருள்: ஒருவர் இந்த நிற உடை அணிகிறார் என்றால் ஒரு புதிய வெளிச்சம் வாழ்க்கையில் உண்டாகி இருக்கிறது என்று அர்த்தம். நம்நாட்டில் ஆன்மீகப் பாதையில் செல்பவர்கள் காவி உடை ஏன் தரித்தனர் என்றால் காவிநிறம் நிறைய விஷயங்களைக் குறிக்கும்.
ஒருவரின் சக்தி நிலை ஆக்ஞாசக்கரத்தை நோக்கி செல்லும் பொழுது அது ஆரஞ்சுநிறத்தில் இருப்பதை உணரலாம். அந்த சக்கரத்துக்கே உரித்தான இயற்கை நிறமும் அதுவே. ஒரு சில தியான பயிற்சிகளில் ஆக்ஞா காவி நிறம் அல்லது குங்குமப் பூ நிறத்தில் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். அது தூய குங்குமப்பூ நிறம் அல்ல, மஞ்சள் கலந்த காவி நிறம்.
ஆக்ஞாசக்கரம் என்பது கிரகிப்புத் திறன் அல்லது ஞானத்தைக் குறிக்கும். அதை மூன்றாவது கண் என்றும் சொல்லுவார்கள். மனித உடலில் 114 சக்கரங்கள் உள்ளன. இவற்றில் இரண்டு சக்கரங்கள் நிறங்களுக்கு அப்பாற்ப்பட்டவை, அவை பொருள் தன்மை சார்ந்தது இல்லை. மற்ற 112 சக்கரங்களும் எதோ ஒரு நிறத்தை கொண்டிருக்கும்.
பொருள் தன்மை சார்ந்தவற்றிற்குவெளிச் சத்தை பிரதிபலிக்கும் தன்மை இருக்கும். வெளிச்சத்தை பிரதிபலித்தால், அதற்கு நிறமும் இருக்கும். ஞானோதயம், மற்றும் மூன்றாவது கண் என்று குறிப்பிடப்படும் புரிதல் பரிமாணத்தை திறப்பது இவற்றை நோக்கியே செயல் முறைகளும் இருக்கும்.
ஆன்மீக பாதையில் இருப்பவர்கள் இந்த வர்ணத்தையே நாடுவார்கள். அந்த நிறத்தை வெளிப்படுத்தவே விரும்புவார்கள். சாதாரணமாக ஒருவர் காவி நிறத்திற்கு மாறினால் அவரை சார்ந்த பழைய விஷயங்கள் உதாரணமாக அவர் பெயர், அடையாளம், குடும்பம், தோற்றம், அனைத்தையும் உதறிவிட்டு வேறுவிதமான வாழ்க்கை முறைக்கு மாறுகிறார்.
அவர் வாழ்வில் புது உதயம் ஆரம்பிக்கும். அந்த புது விதமான புரிதலில், அவர் பழையன எல்லாவற்றையும் துறந்து, புதிய பாதையில் செல்ல, ஒரு புதிய சாத்திய கூறினை நோக்கிச் செல்ல ஆயத்தமாக உள்ளார் என்று பொருள். ஞானத்தை, தெளிவை அது குறிக்கிறது. அவர் ஒரு புதிய பார்வையை உருவாக்க வேண்டும் அல்லது உருவாக்க விருப்பமாக இருக்க வேண்டும், அதனால் இந்த நிறத்தை தேர்ந்தெடுக்கிறார்.
ஆரஞ்சு ஒரு குறியீடு கூட. காலையில் உதிக்கும் சூரியன் ஆரஞ்சு நிறமாக இருக்கும். ஒருவர் இந்த நிற உடை அணிகிறார் என்றால் ஒருபுதிய வெளிச்சம் வாழ்க்கையில் உண்டாகி இருக்கிறது என்று அர்த்தம், உங்களுக்குள் ஒரு எழுச்சி உருவாகி இருக்கிறது ஒருபுதிய உதயம்.
மற்றொரு விதமாக பார்த்தோமானால், பழம், கனிய ஆரம்பித்தால் அது ஆரஞ்சு நிறமாக மாறும். ஆரஞ்சு நிறம் முதிர்ச்சியை குறிக்கும். ஒருவர் ஒரு வித முதிர்ச்சி நிலையை அடைந்தால், அவர் இந்த நிறத்தை உபயோகிக்கலாம்.
வெள்ளை நிறத்தின் பொருள்: வெள்ளை என்பது எட்டாவது நிறம். நிறங்கள் மொத்தம் ஏழு. வெண்மை எட்டாவது நிறம். அதாவது, வெண்மை என்பது எல்லாவற்றையும் கடந்த வாழ்வின் பரிமாணம். வெண்மை என்பது ஒரு நிறம் அல்ல, எந்த நிறமும் இல்லாத பொழுது வெண்மை இருக்கிறது. நிறம் அல்லாத நிலைதான் அது. ஆனால் அது எல்லாவற்றையும் உள்ளே வைத்துக் கொண்டுள்ளது.
வெளிச்சம் என்பது வெண்மையாக இருக்கும், அதே சமயம் எல்லா நிறமும் அதனுள்ளே இருக்கும். அதை தனிதனி நிறங்களாக பிரிக்க முடியும். வெள்ளை நிறம் உங்கள் மீது ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் வெப்ப மண்டலத்தில் இருந்தீர்களானால், அம்மாதிரியான சீதோஷ்ண நிலைக்கு, வெள்ளை நிறம்மிக உகந்தது.
கலாச்சாரப்படி, காவி உடை அணிபவர்கள் குடும்ப மற்றும் சமுதாயத்திலிருந்து விலகி இருப்பார்கள். வெள்ளை உடை அணிபவர்கள் ஆன்மீக பாதையில் இருந்தாலும், மற்ற காரியங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்கள். ஆன்மீகப் பாதையில் இருந்து கொண்டு, மற்ற விஷயங்களில் ஈடுபட்டாலும் தன்னை பாதிக்காமல் அதில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க விருப்பம் கொண்டவர்கள், மேலும் சேகரிக்கவிரும்பாதவர்கள் வெள்ளை உடையை தரிக்கலாம்.