

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 10-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 11-ந் தேதி அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகிறது.
15-ந் தேதி விஷூ பண்டிகையினை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று படி பூஜை நடைபெற்றது. அதிக பொருட்செலவிலும், ஆடம்பரமாகவும் நடைபெறும் இந்த பூஜையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
18-ம் படிக்கு கீழ், மாலை 6 மணிக்கு நடைபெற்ற தீபாராதனைக்கு பின் தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் கலச பூஜை நடந்தது. தொடர்ந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பதினெட்டு படிகளிலும், சிறப்பு பூஜை நடைபெற்றது. சித்திரை மாத பூஜைக்கு பின் கோவில் நடை நாளை(வெள்ளிக்கிழமை ) இரவு 10.30 மணிக்கு அடைக்கப்படும்.
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற மே மாதம் 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.