ஐயப்பன் விரதம் உணர்த்தும் உண்மை

நேர்மை, ஒழுக்கம் போன்ற பாதையில் செல்ல வலியுறுத்தும் விரதமாக ஐயப்ப வழிபாடு இருப்பதும், பக்தர்கள் பலர் சபரிமலை தரிசனத்தைத் தேர்வு செய்ய ஒரு காரணமாக உள்ளது.
ஐயப்பன் விரதம் உணர்த்தும் உண்மை
Published on

கார்த்திகை மாதம் வந்தாலே ஐயப்ப பக்தர்களுக்கு கொண்டாட்டம்தான். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் குளிர்ந்த நீரில் குளித்து, உடல்சுத்தம், மனசுத்தத்துடன் அந்த ஐயப்பனின் அருளை வேண்டி காடு மேடு கடந்து சென்று சரணம் அடைவதில் உள்ள சுகத்தை, அதை அனுபவித்தவர்கள் மட்டுமே அறியமுடியும்.

இந்து மதத்தில் எண்ணிலடங்கா இறை வழிபாடுகள் இருந்தாலும், மண்ணில் மனிதனாகப் பிறந்து, இறைநிலையை அடைந்தவரான ஐயப்பனின் வழிபாடு அனைவரையும் கவரும் ஒன்றாக இருக்கிறது. நேர்மை, ஒழுக்கம் போன்ற பாதையில் செல்ல வலியுறுத்தும் விரதமாக ஐயப்ப வழிபாடு இருப்பதும், பக்தர்கள் பலர் சபரிமலை தரிசனத்தைத் தேர்வு செய்ய ஒரு காரணமாக உள்ளது.

தான்தோன்றித் தனமாக ஊரைச் சுற்றிவருபவர்களை, ‘ஒரு கால்கட்டு போட்டால் சரியாகிவிடுவான்’ என்று சொல்லக் கேட்டிருப்போம். அந்த கால்கட்டுக்கு ‘திருமணம் செய்து வைத்தல்' என்பது பொதுவான பொருளாக இருக்கிறது. ஆனால் கால்கட்டு என்பதற்கு ‘பாதை மாறாது மனதை ஒருநிலைப்படுத்தி வாழ்வது’ என்பதே சரியான பொருளாகும்.

சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பன், குத்து காலிட்டு, கால்கள் கட்டப்பட்ட நிலையில்தான் காட்சி தருகிறார். அவர் தன்னுடைய தவத்தை யாரும் கலைத்து விடக்கூடாது என்பதற்காக மனதை ஒரு நிலைப்படுத்தியபடி அமர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. 

ஐயப்பனின் இந்த விரத தரிசனம், எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் தங்கள் இலக்குகளை மனிதர்கள் விட்டுவிடக்கூடாது என்பதை வலியுறுத்துவதாக கூறுகிறார்கள். ஐயப்பன் வழிபாடு ஏராளமான வாழ்வியல் தத்துவங்களை உள்ளடக்கி உள்ளது. நிலையற்ற இந்த பூலோக வாழ்க்கையில், வாழும் காலத்திலேயே நல்லவராக வாழ்ந்து பிறவிப் பெருங்கடலை கடக்கும் எளிய வழியை காட்டுகிறது ஐயப்பன் வாழும் சபரிமலையின் வரலாறு. 

ஆடம்பர வாழ்வு நிலையற்றது என்று உணர்த்தவே ஐயப்ப பக்தர்கள் எளிமையான ஆடையை.. சீருடைபோல் அணிந்து செல்கிறார்கள். மேலும் அனைவரும் சமத்துவமானவர்கள் என்பதற்காகவே ஒரே மாதிரியான இருமுடி கட்டி மலை யேறுகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com