

இந்த தலத்திற்கு நவலிங்கத் தலம் எனும் சிறப்புப் பெயரும் உண்டு. இந்த ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சிறிய கோபுர வாசல் வழியாகச் சென்றால் மங்கள தீர்த்தம் என்னும் ஆலயத் திருக்குளம் அமையப் பெற்றுள்ளது. இந்த புனித நீரில் நீராடி இறைவனை வழிபட்டால், தீராத செவ்வாய் தோஷம் தீரும் என்பது ஐதீகம்.
தேவேந்திரன் தன் பிணியினைப் போக்கவும் மற்றும் இந்த தலத்தில் செவ்வாய் அன்று இந்த மங்கள தீர்த்தத்தில் புனித நீராடும் பக்தர்களின் பிணியையும் போக்க வேண்டும் என்றும் ஈசனிடம் வரம் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. இந்திரனின் பிணி நீக்கி அருள் செய்ததுடன் இங்குள்ள சிவலிங்கத்தினை வழிபடுவதால், பிணிகளை தீர்ப்பதால் ஈஸ்வரனுக்கு வைத்தீஸ்வரர் என்ற பெயர் வழங்கப்பட்டதாக தலபுராணம் கூறுகிறது.