

பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் உலக நலன்வேண்டி அன்னாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான அன்னாபிஷேக விழா பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று நடந்தது. விழாவையொட்டி முத்துக்குமாரசாமி மண்டபத்தில் 3 வெள்ளி கலசங்கள் வைத்து விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், யாகம் நடைபெற்றது.
இதையடுத்து நடந்த சாயரட்சை பூஜையில் சிவன், சோமாஸ்கந்தர், பெரியநாயகி அம்மன், முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை ஆகியோருக்கு கலச அபிஷேகம் மற்றும் 16 வகை அபிஷேகமும், அன்னத்தால் கிரீடம் வைத்து சிறப்பு அலங்காரமும், அதைத்தொடர்ந்து அன்னாபிஷேகமும் நடைபெற்றது.
அதன் பின்னர் மகா தீபாராதனையும் நடந்தது. இந்த நிகழ்ச்சியின் உபயதாரர்களான கண்பத் கிராண்ட் ஓட்டல் உரிமையாளர்கள் ஹரிகரமுத்து, செந்தில் ஆகியோருக்கு பரிவட்டமும், கோவில் பிரசாதமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.