பழனி முருகன் கோவிலில் காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய நவராத்திரி விழா

பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நவராத்திரி விழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் துவாரபாலகருக்கு காப்புகட்டுதல் நடந்தபோது எடுத்தபடம்.
நவராத்திரி விழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் துவாரபாலகருக்கு காப்புகட்டுதல் நடந்தபோது எடுத்தபடம்.
Published on

பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவில், திருஆவினன்குடி கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு விநாயகர் பூஜை, காலசந்தி பூஜை நடந்தன. இதையடுத்து சிவன், நடராஜர், சிவகாமி அம்மன், சோமாஸ்கந்தர், பெரியநாயகி அம்மன், முத்துகுமாரசுவாமி வள்ளி-தெய்வானை மற்றும் கோவில் யானை கஸ்தூரிக்கும் காப்புக்கட்டு நிகழ்ச்சி நடந்தது.

இதைத் தொடர்ந்து உச்சிகால பூஜையில் திருஆவினன்குடி கோவிலிலும், மலைக்கோவிலிலும் விநாயகர், மூலவர், சின்னக்குமாரர், சண்முகர், வள்ளி தெய்வானை, துவாரபாலகர்கள் ஆகியோருக்கு காப்புக்கட்டு நடைபெற்றது. காப்பு கட்டு நிகழ்ச்சியை கோவில் பட்டத்துகுருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணிய குருக்கள் உள்ளிட்ட குருக்கள் செய்தனர்.

நவராத்திரி விழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் நேற்று முதல் வருகிற 19-ந்தேதி வரை 11 நாட்கள் சுவாமி புறப்பாடு நடைபெறாது . மேலும் வருகிற 19-ந்தேதி விஜயதசமி விழாவில் மலைக்கோவிலில் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், 3.05 மணிக்கு பராசக்திவேல் புறப்பாடும், உடன் சன்னதி அடைக்கப்படும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

இதையடுத்து பராசக்திவேல் மலைக்கோவிலில் இருந்து புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோவில் வந்து சேர்கிறது. பின்னர் அங்கிருந்து தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி பராசக்திவேலுடன் சென்று கோதைமங்கலம் கோதை ஈஸ்வரர் கோவிலில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பராசக்திவேல் மலைக்கோவில் வந்து சேரும். இரவு 10 மணிக்கு சம்ரோட்சண பூஜையும், பின்னர் ராக்கால பூஜையும் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com