

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பெண்கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்வதால் இது பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனங்களிலும், நடைபயணமாகவும் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கடற்கரையில் கால்களை நனைத்து விட்டு கோவில் வளாகத்தில் உள்ள பொங்கலிடும் மண்டபத்தில் திரண்டனர். பின்னர், அவர்கள் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.
நிகழ்ச்சியையொட்டி காலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை, மதியம் உச்சபூஜை, அன்னதானம், மாலையில் சாயரட்சை, தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை ஆகியவை நடைபெற்றது.