மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை மீனபரணி கொடைவிழா

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மீனபரணி கொடை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை மீனபரணி கொடைவிழா
Published on

குமரி மாவட்டத்தில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா கடந்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 12-ந் தேதி நள்ளிரவு ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவடைந்தது.

தொடர்ந்து 19-ந் தேதி எட்டாம் கொடை விழா நடைபெற்றது. இதையடுத்து மீனபரணிக்கொடை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இதையொட்டி நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு, 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், காலை 6.30 மணிக்கு தீபாராதனை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளல், 11 மணிக்கு 150 குடங்களில் சந்தன பவனி, நண்பகல் 12.15 மணிக்கு உச்ச பூஜை, மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளல், நள்ளிரவு 1 மணியளவில் வலியபடுக்கை பூஜை ஆகியவை நடக்கிறது. வலியபடுக்கையின்போது அம்மனுக்கு மிகவும் பிடித்த கனி வகைகள், உணவு பதார்த்தங்கள் ஆகியவற்றை பெருமளவில் அம்மன் முன் படையலிட்டு வழிபாடு நடைபெறும்.

இந்த வழிபாடு மாசிக்கொடையின் 6-ம் நாளன்றும், அம்மன் பிறந்த நட்சத்திரம் என கருதப்படும் பங்குனி மாதம் பரணி நட்சத்திரத்தன்றும், கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என ஆண்டிற்கு 3 முறை மட்டும் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த வழிபாடு முக்கிய வழிபாடாக கருதப் படுகிறது. மீனபரணி கொடையை முன்னிட்டு கேரளா மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் மண்டைக்காட்டில் குவிந்து பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com