

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி பெருமாள் கோவில் உள்ளது. வைணவ தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாக போற்றப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை கொடியேற்றப்பட்டது. அப்போது கோமளவல்லி தாயார் சிறப்பு மலர் அலங்காரத்தில் கொடி மரம் முன்பு எழுந்தருளினார். இரவு தங்க மங்கள கிரியில் தாயார் புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 30-ந் தேதி(வெள்ளிக்கிழமை) வரை காலையில் பல்லக்கிலும், இரவு பல்வேறு வாகனங்களிலும் சாமி புறப்பாடு நடைபெறுகிறது.
31-ந் தேதி(சனிக்கிழமை) பங்குனி உத்திரத்தையொட்டி காலை வெள்ளி ரதத்தில் தாயார் உள்பிரகார புறப்பாடும், 11 மணிக்கு தீர்த்தவாரியும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு பந்தக்கால் முகூர்த்தம் நடக்கிறது. அடுத்த மாதம்(ஏப்ரல்) 2-ந் தேதி இரவு திருக்கல்யாணம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள் செய்து உள்ளனர்.