கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் கொடிமரம் அமைப்பதற்கான பூஜை நடந்த போது எடுத்த படம்.
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் கொடிமரம் அமைப்பதற்கான பூஜை நடந்த போது எடுத்த படம்.
Published on

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் கும்பகோணம் சாரங்கபாணி கோவில், கும்பகோணத்தில் உள்ள வைணவ கோவில்களில் புகழ்பெற்றது ஆகும். இந்த கோவிலில் உள்ள கொடிமரம் 1937-ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கொடிமரம் சேதமடைந்தது.

இதனை தொடர்ந்து கோவிலில் புதிய கொடிமரம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு ஆன்மிக அமைப்புகளும், பக்தர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து இந்த கோவிலுக்கு புதிய கொடிமரம் நிறுவ அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வந்தனர்.

இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்தவரும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான ரவிநாராயணன் என்பவர் சாரங்கபாணி கோவிலுக்கு ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய கொடிமரம் அமைத்து தர முன்வந்தார்.

அதன்படி கடந்த ஆண்டு மலேசியாவில் இருந்து 4 டன் எடையுள்ள தேக்கு மரம் இறக்குமதி செய்யப்பட்டு கும்பகோணம் கொண்டு வரப்பட்டது. பின்னர் சாரங்கபாணி கோவிலில் புதிய கொடிமரத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி பாலாலயம் செய்யப்பட்டது.

பின்னர் ஸ்திபதியார்கள் கொடிமரத்தை செதுக்கி பல்வேறு வேலைப்பாடுகள் செய்து அதை 2½ டன் கொண்ட கொடிமரமாக வடிவமைத்தனர். இதையடுத்து புதிய கொடிமரத்துக்கு நேற்று பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் ராட்சத கிரேன் மூலம் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறையின் மயிலாடுதுறை மண்டல துணை ஆணையர்(நகைகள் சரிபார்ப்பு) சி.நித்யா, கோவில் செயல் அலுவலர் ஆசைதம்பி மற்றும் உபயதாரர்கள் ரவிநாராயணன், சுசீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com