

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 31-ந்தேதி, பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவில் நேற்று பொடிக்கார வெள்ளாளர் மண்டகப்படி சார்பில் அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றன. அதையொட்டி காலையில் அம்மனுக்கு திருமஞ்சனம், பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது.
மேலும் முளைப்பாரி, பால்குடம் ஆகியவை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு காணிக்கை செலுத்தப்பட்டது. அதேபோல் அம்மன் கரகத்துடன் எழுந்தருளி மெயின்ரோடு, கிழக்குரதவீதி உள்பட முக்கிய பகுதிகள் வழியாக வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பொடிக்கார வெள்ளாளர் மண்டகப்படியில் அம்மன் இறங்கினார். அங்கு அம்மனுக்கு பூஜைகள், நைவேத்தியம் ஆகியவை நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த மின்அலங்கார தேர் மேற்குரதவீதி, கலைக்கோட்டு விநாயகர் கோவில், பென்சனர்தெரு, கோபாலசமுத்திரம், கிழக்குரதவீதி வழியாக கோவிலை வந்தடைந்தது.