

இவையில்லாமல் கேரள மாநிலம் குமுளியில் இருந்து மலைப்பாதை வழியாக ஜீப் போன்ற வாகனங்களில் சென்று வரலாம். ஆனால் இந்த மலைப்பாதையையும் திருவிழா நடைபெறும் போது ஒரு நாள் மட்டும் கேரள வனத்துறையினர் திறந்துவிடுவார்கள். மற்ற நேரங்களில் இந்த பாதை மூடப்பட்டு இருக்கும்.
ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று கண்ணகி கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவில் தேனி மாவட்டம் மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இந்த விழா ஒரு வாரம் நடைபெற்று வந்தது. தற்போது ஒரு நாள் மட்டும் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா வருகிற 10-ந் தேதி நடக்கிறது.
விழாவையொட்டி பளியன்குடியிருப்பில் நேற்று காலையில் கொடியேற்றம் நடைபெற்றது. பச்சை மூங்கிலில் கண்ணகி உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது. முன்னதாக கொடிமரத்துக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் கூடலூர்- கம்பம் கண்ணகி கோவில் அறக்கட்டளை குழுவினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.