சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை முதல் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பொதுமக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு நாளை (வியாழக்கிழமை) காலை முதல் அங்கப் பிரதட்சணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை முதல் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி
Published on

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தினமும் காலை நேரத்தில் கிழக்கு நுழைவு வாயிலில் கொடிமரம் முன் பகுதியிலிருந்து அங்கப்பிரதட்சணம் செய்வது வழக்கம். கடந்த 2010-ம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு பிரகாரங்கள் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்ற காரணத்தால் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக அங்கப்பிரதட்சணம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று பிரகாரம் விரிவாக்கப்பணிகள் நிறைவு பெற்றதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் நலன் கருதியும், நாளை (வியாழக்கிழமை) காலை முதல் அங்கப் பிரதட்சணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

தினமும் காலை 5.30 மணி முதல் 9 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்கள் கிழக்கு ராஜகோபுர நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்று கொடிமரம் முன்பு தொடங்கி தெற்கு, மேற்கு, வடக்கு பிரகாரம் வழியாக வந்து மீண்டும் கிழக்கு பிரகாரம் கொடிமரம் முன்பு முடித்துக்கொள்ள வேண்டும். இந்த தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com