

8-ந்தேதி கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார். மறுநாள் மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெற்று, 10-ந்தேதி சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் அவரை தரிசனம் செய்தனர்.
மறுநாள் வண்டியூர் வீரராகவபெருமாள் கோவிலிலிருந்து சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு மண்டூக முனிவருக்கு, கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி சாபம் தீர்த்து அருள்பாலித்தார். அன்றிரவு விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து 13-ந்தேதி நள்ளிரவுக்கு பின்பு பூப்பல்லக்கு விழா நடந்து, தல்லாகுளம் கருப்பணசாமி கோவில் முன்பு வையாழியாகி, கள்ளழகர் வந்த வழியாக மலைக்கு திரும்பினார். நேற்று (14-ந்தேதி) அதிகாலை அப்பன் திருப்பதி, கள்ளந்திரி உள்ளிட்ட பல மண்டபங்களில் கள்ளழகர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்.
பின்பு காலை 10.30 மணிக்கு அழகர்கோவில் கோட்டை வாசலை சாமி வந்தடைந்தார். தொடர்ந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் முன்பு விசேஷ பூஜைகள், தீபாராதனை நடந்தது. பின்னர் அங்கு வையாழியாகி கோவில் உள்பிரகாரத்திற்குள் கள்ளழகர் சென்றார். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று முழக்கமிட்டு, மலர்கள் தூவி கள்ளழகரை வரவேற்றனர்.
தொடர்ந்து அதிர்வேட்டுகள் முழங்கின. அவை அழகர்மலையில் எதிரொலித்தன. பின்னர் 18 பெண்கள் பூசணிக்காயில் கற்பூரம் ஏற்றி கள்ளழகர் வந்த தங்க பல்லக்கை மூன்று முறை வலம் வந்து திருஷ்டி கழித்தனர். அதன்பின் காலை 11.15 மணிக்கு மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கல்யாண சுந்தரவல்லி கோவில் யானை முன் செல்ல கள்ளழகர் பக்தர்கள் கூட்டத்தில் மிதந்து கோவிலுக்குள் போய் இருப்பிடம் சேர்ந்தார்.
திருவிழாவிற்காக அழகர்கோவிலில் இருந்து 26 உண்டியல் பெட்டிகள் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக சாமியுடன் சென்று திரும்பின. இந்த திருவிழாவின் போது கள்ளழகர் சுமார் 450-க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் சாமி எழுந்தருளினார். இந்த விழாவில் தென்மாவட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அழகர்கோவிலுக்கு கார், வேன் மற்றும் பஸ் போன்ற வாகனங்களில் வந்து குவிந்து கள்ளழகரை தரிசனம் செய்தனர்.