

ஆவுடையார் கோவிலில் உள்ள தேர் தமிழகத்திலுள்ள பெரிய தேர்களுள் ஒன்றாகும். ஸ்ரீவில்லிப்புத்தூர், திருநெல்வேலி, திருவாரூர், ஆவுடையார் கோவில் ஆகிய ஊர்களில் உள்ள தேர்கள்தான் தமிழகத்தில் உள்ள கோவில்களின் தேர்களில் மிகவும் பெரிய தேராகும்.
ஆவுடையார் கோவிலில் உள்ள தேர்ச் சக்கரத்தின் குறுக்களவு மட்டும் 90 அங்குலம் மற்றும் சக்கரத்தின் அகலம் 36 அங்குலமாகும். 50 முதல் 500 பேர் வரை கூடினால் எந்தத் தேரையும் இழுத்து விடலாம். ஆனால் இந்த ஆவுடையார்கோவில் தேரை இழுக்க சுமார் 5,000 பேர் கூடினால்தான் இழுக்க முடியும். இதிலும் அதன் அடங்காத் தன்மை வெளிப்படுகிறது.
இந்தத் தேரை இழுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட வடக்கயிற்றை நமது இரு கைகளாலும் இணைத்துப் பிடித்தால்கூட ஒரு கையின் விரல் இன்னொரு கையின் விரலைத் தொடாது. இரு கைகளால் பிடிக்கும் போது வடக்கயிறு நமது கைக்குள் அடங்காது. இதிலும் அதன் அடங்காத்தன்மை நமக்கெல்லாம் பளிச்செனத் தெரியும்.