

சிவபெருமான் திருக்கோவில்களில் ராஜகோபுரத்தை அடுத்து முதலில் பலிபீடம், நந்தி, கொடிமரம் காணப்படும். ஆனால் ஆவுடையார் திருக்கோவிலில் அப்படி இல்லை. கோவில்களில் நடைபெறும் நாள் பூசை, விழாக்களில் நாத சுரம், மேளம், பேரிகை, சுத்த மத்தளம் முதலிய வாத்தியங் கள் முழங்கப்படும். இத்தகைய வாத்திய ஒலிகளை இக்கோவிலில் கேட்க முடியாது.
திருச்சின்னம், சங்கு, மணி முதலியவற்றின் ஒலிகளே கேட்கப்படும். சிவன் இத்தலத்தில் கருவறையில் அரூபமாகவும், அருவுருவமாக குருந்தமர (தல விருட்சம்) வடிவிலும், உருவமாக மாணிக்கவாசகராகவும் அருளுகிறார். இங்கு குருந்த மரத்தையும் சிவனாகக்கருதுவதால், கார்த்திகை சோம வாரத்தில் இந்த மரத்தின் முன்பாகவே, 108 சங்காபிஷேகம் நடக்கிறது.
மூலஸ்தானத்தில் சதுர வடிவ ஆவுடையார் மட்டுமே இருக்கிறது. அதன்மீது ஒரு குவளை சாத்தப்பட்டுள்ளது. குவளை உடலாகவும், அதனுள் இருப்பது ஆத்மாவாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாகவும், ஆத்மாக்களை காத்தருள்பவர் என்பதாலும் சுவாமிக்கு “ஆத்மநாதர்” என்று பெயர் ஏற்பட்டது. ஆறு கால பூஜையின்போதும், இவருக்கு 108 மூலிகைகள் கலந்த தைல முழுக்கு நடப்பது சிறப்பு.