

குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் கன்னியாகுமரி தூய அலங்கார உபகாரமாதா திருத்தலமும் ஒன்று. இங்கு 2 நாள் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. அன்று மாலையில் ஜெபமாலை, மாலை வழிபாடு, நற்கருணைஆசீர் போன்றவை நடந்தது. 2-வது நாளான நேற்று காலையில் திருவிழா திருப்பலி, முதல் திருவிருந்து போன்றவை நடந்தது.
மாலையில் நற்கருணை பவனி நடந்தது. இந்த பவனி ஆலயத்தின் முன்பு இருந்து புறப்பட்டு தோரோடும் 4 வீதிகள் வழியாக மீண்டும் ஆலய வளாகத்தின் முன்பு நிறைவடைந்தது.
நற்கருணை பவனி செல்லும் பாதைகளில் மக்கள் ஏராளமான மலர்களால் வண்ணமிகு கோலங்கள் போட்டு வரவேற்பு அளித்தனர்.
பவனியை பங்குத்தந்தை ஜோசப் ரொமால்டு தலைமை ஏற்று நடத்தினார். இறுதியாக மறையுரையும் நற்கருணை ஆசீரும் நடந்தது. இதில் இணை பங்குத்தந்தையர்கள் லெனின், சுரேஷ், பங்குப்பேரவை துணைத்தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியா வில்லவராயர், பொருளாளர் ஆன்றின் செல்வகுமார், துணைசெயலாளர் தினகரன் மற்றும் பங்குப்பேரவை நிர்வாகிகள், பங்குமக்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.