தாய் அமுதாம்பிகை

விஷத்தினை தடுத்து வாழ்வினை அமுதமாக்கியதால் தாய் அமுதாம்பிகை என்று அழைக்கப்பட்டாள்.அபகரணம் என்றால் ஏற்றுக்கொள்ளுதல் என்பதாகும்.
தாய் அமுதாம்பிகை
Published on

அபகரணம் என்றால் ஏற்றுக்கொள்ளுதல் என்பதாகும்.

விஷத்தை ஏற்றுக்கொண்டதால் விஷாபகரண மூர்த்தி என்று அழைக்கப்பட்டார்.

அப்படி ஈஸ்வரன் விஷத்தினை அருந்தியபோது லோக மாதவான புவனேஸ்வரி பரமனின் கண்டத்தினைப் பற்றி விஷம் உள்ளே செல்லாதவாறு தடுத்து கண்டத்தினிலேயே அடக்கி விடுகிறார்.

விஷத்தினை தடுத்து வாழ்வினை அமுதமாக்கியதால் தாய் அமுதாம்பிகை என்று அழைக்கப்பட்டாள்.

பொருந்தியமுப்புரை செப்புரைசெய்யும் புணர்முலையால்

வருந்திய மருங்குல் மனோன்மணி வார்சடையோன்

அருந்திய நஞ்(சு) அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்

திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே!

என்று அபிராமி அந்தாதியில் அபிராமப்பட்டர் குறிப்பிடுகிறார்.

அன்று முதல் சதாசிவனுக்கு திருநீலகண்டன், ஸ்ரீகண்டர், விஷாபரணர், நஞ்சுண்டேஸ்வரன், காளகண்டன் என்றும் போற்றப்படுகிறார்.

திருநீலகண்ட வடிவச் சிறப்புப்பற்றி கம்பநாடர்,

"கார்விடக் கறையுடை கணிச்சி வானவன்

வார்சடைப் புடையின் ஓர்மதி, மிலைச்சதான்

சூர் சுடர்க் குலமெலாம் சூடினான் என

வீர பட்டத்தொரு திலகம் மின்னலே!"

என்று மிக அழகாக பாடி உள்ளார்.

சரபோப நிஷத்தில்

பபேதோ ஹாலாஹலம் தந்தம்!

தஸ்மை ருத்ராய நமோ அஸ்து!!

(ஆலகால விஷத்தை அருந்திய ருத்ரனுக்கு நமஸ்காரம்) என்று கூறுகிறார்.

"கால கூட விஷதாரணே நீலக்வர்ணக்ரீவா யஸ்ய அஸெள நீலக்ரீவ!"

என்று தைத்ரிய சம்ஹிதையில் விஷத்தை உண்பதனால் நீலவர்ணக் கழுத்து ஈஸ்வரனுக்கு உண்டாயிற்று என்று கூறுகிறது.

இப்படி விஷம் அருந்தி கண்டத்தில் தங்கி இருந்ததால் திருநீலகண்டரானார் விஸ்வேஸ்வரன்.

ஏகாதசி அன்று பாற்கடலை கடையத்துவங்கி, துவாசியன்றும் தொடர்ந்து, திரயேதசி அன்று ஆலகால விஷம் அருந்திய ஈஸ்வரன் அனைத்து உலகினையும் காத்து தேவர்களை திருப்திபடுத்த மாலையும், இரவும் இணையும் நேரமான பிரதோஷ காலத்தில் சிவபெருமானின் சிவகணங்களுக்கு தலைவராக விளங்கும் நந்தி தேவரின் இரு கொம்புகளிடையே நடனமாடி ஆனந்த கூத்தாடுகிறார்.

இந்த நிகழ்ச்சி நடைபெறும் நாள் சனிக்கிழமையாகும்.

அதனாலேயே சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்தினை சனி மகாப்பிரதோஷ தினமாக கருதப்படுகிறது.

பிரதோஷ தினங்களில் நந்தி தேவருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

பிரதோஷ வழிபாட்டின் போது நந்திதேவரை வணங்கினால்தான் சிவன் அருளை முழுமையாக பெற முடியும்.

நந்தியை வணங்கினால் ஈடற்ற பலன்களை பெறலாம் என்று சிவபெருமானே அருளாசி வழங்கி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com