மகத்துவம் நிறைந்த குங்குமம்

பொதுவாகவே எல்லா சுபகாரியங்களிலும் மஞ்சளும், குங்குமமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.ஆலயங்களில் குங்குமம் முதல் இடம் பெற்றிருக்கும்.
மகத்துவம் நிறைந்த குங்குமம்
Published on

மஞ்சளும், குங்குமமும் மகத்துவம் நிறைந்தது என்று நமது இந்து மத சாஸ்திரங்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளன.

பொதுவாகவே எல்லா சுபகாரியங்களிலும் மஞ்சளும், குங்குமமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த இரண்டும் இல்லாமல் எந்த மங்கள செய்கைகளும் மகத்துவம் பெற முடியாது.

கோவிலாக இருந்தாலும், வீடாக இருந்தாலும் சரி, அவசியம் வழிபாடுகளில் மஞ்சள், குங்குமம் இடம் பெற்றிருக்கும்.

குறிப்பாக அம்பாள் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆலயங்களில் குங்குமம் முதல் இடம் பெற்றிருக்கும். அந்த அளவுக்கு குங்குமம் முக்கியமானது.

திருமணம், வீடு கிரகபிரவேசம் உள்ளிட்ட சடங்குகளில் நாம் உன்னிப்பாக கவனித்தால் முதலில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, அதில் குங்குமமிட்ட பிறகுதான் மற்ற செயல்கள் தொடங்குவதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். அது போலத்தான் ஒரு பெண்ணை மங்களகரமாக தோன்ற செய்வதும் மஞ்சள்-குங்குமம்தான்.

ஒரு பெண் தன் நெற்றில் குங்குமம் வைத்துக் கொண்ட பிறகு பாருங்கள், அந்த பெண்ணுக்கும் குங்குமத்துக்கும் தனி மரியாதை உண்டு.

பெண்கள் தங்கள் திருமாங்கல்யத்தில் குங்குமம் வைத்து கண்ணில் ஒற்றிக் கொள்வதுண்டு. இதுதான் சுமங்கலிக்கு ஆதாரமாகக் கருதப்படுகிறது.

இதனால்தான் அம்பாள் தலங்களில் வழங்கப்படும் குங்குமத்தை பெண்கள் மிகப்பெரும் பாக்கியமாகக் கருதிப் பெற்றுக் கொள்வதுண்டு. அதிலும் சில அம்பாள் தலங்களில் வழங்கப்படும் குங்குமத்துக்கு இரட்டிப்பு சக்தி உண்டு.

அந்த வகையில் பாரிமுனை காளிகாம்பாள் தலத்தில் பக்தர்களுக்கு வழங்கப்படும் குங்குமத்துக்கு தனித்துவம் உண்டு.

இத்தலத்தில் பக்தர்கள் அனைவருக்கும் பெரும்பாலும் குங்குமத்துடன் எலுமிச்சம் பழமும் சேர்த்துக் கொடுக்கிறார்கள்.

காளிகாம்பாளை மனம் குளிர தரிசனம் செய்து விட்டு, முடிந்தால் அவள் முன் உள்ள சன்னதியில் சிறிது நேரம் அமர்ந்து அவளை வழிபட்டு தியானிக்கலாம். மனம் நிறைவு பெறும் வரை இந்த தரிசனத்தை மேற்கொள்ளலாம்.

பிறகு அம்பாளிடம் விடை பெற்று, வலது புறம் உள்ள கமடேஸ்வரர் சன்னதிக்கு வந்து வழிபட வேண்டும். அந்த சன்னதி அருகில்தான் குங்கும பிரசாதம் வழங்குவார்கள்.

அந்த குங்குமம் உங்கள் திருக்கரங்களில் பட்டதுமே நீங்கள் மெய்சிலிர்த்துப் போவீர்கள். அந்த குங்குமத்துக்கு அவ்வளவு சக்தி உண்டு.

அத்தகைய குங்குமம் உங்கள் பரந்த நெற்றியை அலங்கரிக்கும் போது, மகத்துவம் அதிகரித்து விடும்.

உங்களை எந்த பார்வையும், திருஷ்டியும், ஏவலும் அண்டவே அண்டாது. இது நிஜம்.

ஆண்டாள் சன்னதியில் பாருங்கள், அவள் நெற்றிக் குங்குமம் இல்லாமல் இருப்பதே இல்லை. அந்த குங்குமம், அவள் கண்ணன் மீது கொண்டுள்ள அன்பை காட்டும்.

அதுபோலவே காளிகாம்பாள் தலத்தில் தரும் குங்கும் இட்ட பெண்களைப் பாருங்கள், அவர்கள் அம்பாளின் நல்ல அருளை முழுமையாகப் பெற்றவர்களாகக் காட்சியளிப்பார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com