கன்னி தெய்வ வழிபாடு

இப்படி ஒரு கன்னி வழிபாடு பல குடும்பத்திற்கு தெரியவும் செய்யாது. பெற்றோர்கள் செய்து வந்த பூஜையை குடும்பத்து ஆண் வாரிசுகள் தொடர வேண்டும்.
கன்னி தெய்வ வழிபாடு
Published on

பெண்களை தெய்வமாக வழிபடும் வழக்கம் தமிழ்நாட்டில் தொன்று தொட்டே இருந்து வருகிறது. ஒவ்வொரு தமிழ் குடும்பத்திலும் பிறந்த பெண் குழந்தைகளை மகாலட்சுமியின் அம்சமாகவே பாவிக்கிறார்கள். பூமியில் பிறந்தவர்கள் இறந்தால் அவர்களை தெய்வத்திற்கு சமமாக பாவிப்பது நமது மரபு.

அதுவும் வீட்டில் பிறந்த ஒரு பருவப்பெண் மணம் முடிக்காமல் கன்னியாக இறந்தால் அவளை கன்னி சக்தியாக வழிபடும் பண்பாடு நமது மரபில் இருந்து வருகிறது.

இறந்த கன்னிப் பெண்கள் தமது குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் சக்தி படைத்தவர்கள்.

ஒரு பருவப் பெண் கன்னி கழிந்தால் மட்டுமே முழுமையான பெண்ணாகிறாள்.பண்டைய காலத்தில் பால்ய விவாகம் (குழந்தை திருமணம்) மிகுதியாக இருந்தது. மருத்துவ வசதிகள் குறைவாக இருந்த காரணத்தால் நோய் தாக்கம் அல்லது இயற்கை சீற்றம் போன்ற பல்வேறு காரணத்தால் கணவன் இறந்தால் தன் வாழ்நாள் முழுவதும் கன்னி கழியாமல் , மறு திருமணமும் செய்யாமல் தன் புகுந்த வீட்டில் அல்லது பிறந்த வீட்டு உறுப்பினர்களுக்கு சேவை செய்தே தங்கள் வாழ்நாளை கழித்தனர். பல குடும்பங்களில் திருமணமாகாமல் கன்னியாகவே இருந்து உடன் பிறந்தவர்களின் குழந்தைகளையும் வளர்த்து இருக்கிறார்கள்.

பழங்காலத்தில் ராஜ குடும்பத்தினர், ஜமீன்கள் போன்ற பலர் அழகிய பருவ வயது பெண்களை தார்மீகமற்ற முறையில் கன்னிகைகளை கைப்பாவைகளாக பயன்படுத்தி வந்தார்கள். இது பற்றிய பல்வேறு புராண சம்பவம் மற்றும் கதைகளை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்.

பல கன்னிப் பெண்கள் தங்கள் கன்னித்தன்மையையும் , பாரம்பரிய குடும்ப கவுரவத்தை காக்கவும் தாங்களே தங்களை மாய்த்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

இன்னும் ஒரு படி மேலே போய் ஒரு சில குடும்பங்களில் பருவம் அடைந்த பருவப் பெண்கள் காதலித்தால் குடும்ப கவுரவத்தை காக்க பருவமடைந்த கன்னியை உடன் பிறந்தவர்கள் அல்லது பெற்றோர்கள் கொலையும் செய்து இருக்கிறார்கள்.

இந்தக் கன்னிகள் தங்களின் சராசரி வாழ்வைத் தவற விட்டவர்கள். அல்லது துச்சமாகத் தூக்கியெறிந்தவர்கள்.

கன்னித்தன்மையைக் கொடுத்து தாய்மையைப் பரிசாகப் பெறாமலேயே இறந்தவர்கள். இதனாலேயே சராசரி பெண்கள் ரட்சிக்கும் தெய்வ நிலைக்கு உயர்ந்து விட்டவர்கள்.

மிக பிரபலமாக கன்னி தெய்வங்கள் போற்றப்படுவதற்கு இது போன்ற பல காரணங்கள் உண்டு. தன் கன்னித்தன்மை வேறு குடும்பத்து ஆணுக்கு கொடுத்து மனித குலத்தை விருத்தி அடையச் செய்யும் பெண்கள் மகாசக்திகள் தான்.

பெண்களால் மட்டுமே ஒருவரின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும். கணவனுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படும் போது தன் பிறந்த வீட்டு சீதனத்தை கொடுத்து குடும்ப கவுரவத்தை காக்கிறார்கள். பல பெண்கள் கருக்கலைப்பில் தங்கள் உயிரையும் இழந்து இருக்கிறார்கள்.

தாயின் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியை கண்டறிய உருவாக்கப்பட்ட ஸ்கேன் என்ற கருவி பல பெண் குழந்தைகளை தாயின் கருவறையிலேயே கல்லறையாகச் செய்து பெண்களின் விகிதாசாரத்தை குறைத்துவிட்டது. தாயின் கருவறையில் இறந்த பல பெண் குழந்தைகளின் சாபம் தான் குழந்தையின்மை மற்றும் திருமணத்தடைக்கு பிரதானமான காரணம். நாட்டில் பெண்களை விட ஆண்களே அதிகமாக இருப்பதால் தான் திருமணம் என்ற அத்தியாயமே இல்லாமல் பல ஆண்கள் இருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல கலாச்சார மாற்றத்தால் குடும்பத்தில் கன்னியாக இறந்த கன்னிகைகளை வழிபட தவறி விட்டனர். இல்லையில்லை மறந்தே விட்டனர்.

இப்படி ஒரு கன்னி வழிபாடு பல குடும்பத்திற்கு தெரியவும் செய்யாது. பெற்றோர்கள் செய்து வந்த பூஜையை குடும்பத்து ஆண் வாரிசுகள் தொடர வேண்டும்.

காலச் சூழல் காரணமாக வழிபாட்டை மறந்து வாழ்ந்த பல குடும்பங்கள் வீழ்ந்து போய் வாழ்ந்த சுவடே இல்லாமல் இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com