குருவருள் பெற்றுத்தரும் தைப்பூசம்

இவ்வேல் பிரம்ம வித்யா சொரூபமானது.இதையொட்டி சமயபுரத்தில் 10 நாட்கள் திருவிழாவும் அம்மன் புறப்பாடும் சிறப்பாக நடைபெறும்.
குருவருள் பெற்றுத்தரும் தைப்பூசம்
Published on

தைப்பூசம் முருகனுக்குச் செய்யும் சிறப்பு விழாவாகும். அன்று எல்லா முருக ஆலயங்களிலும் வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும்.

இப்படி சிறப்பாக கொண்டாடக் காரணம் அன்றுதான் முருகன் வள்ளியை மணம்புரிந்து கொண்டான்.

சூரனை அழிக்கப் பார்வதி தன் சக்தி, ஆற்றல் அனைத்தையும் திரட்டி ஒன்று சேர்த்து வேலாக மாற்றி அந்தச் சக்திவேலை முருகனுக்கு அளித்த நாள் தைப்பூசம்.

இவ்வேல் பிரம்ம வித்யா சொரூபமானது.

தைப்பூச நன்னாளில் தான் உலகில் முதன் முதலில் நீரும், அதிலிருந்து உலகும் உயிரிணங்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

இந்தத் தைப்பூச நன்னாளில் ஸ்ரீரங்கம், ரங்கநாதப் பெருமாள் தன் தங்கை சமயபுரத்தம்மனுக்கு சீர் வரிசைகள் கொடுப்பார்.

இதையொட்டி சமயபுரத்தில் 10 நாட்கள் திருவிழாவும் அம்மன் புறப்பாடும் சிறப்பாக நடைபெறும்.

அன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும்.

மேலும் இந்த நன்னாளில் சுப காரியங்கள், செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.

இந்தத் தைப்பூச நன்னாளில்தான் ஞான சம்பந்தர் மயிலையில் பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்தி கலசத்தில் இருந்து அப்பெண்ணை உயிருடன் எழுந்து வரும்படி பதிகம் பாடி, உயிர்ப்பித்தார்.

இது மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில்தான் நடந்தது. இதை மயிலைப்புராணம் கூறுகிறது. இச்சன்னதி மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் கொடி மரம் அருகேயுள்ளது.

தில்லை நடராசருக்கும் இந்தப் பூச நன்னாள் உகந்தது. இவர் பார்வதியுடன் நடத்திய ஆனந்த நடனத்தை தில்லை சிதம்பரத்தில், பதஞ்சலி முனிவர் (ஆதிசேஷ அம்சம்) வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர், ஜைன முனிவர்) இவர்களும் தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த தைப்பூச நன்னாளில்தான் ஆனந்த நடனம் கண்டு களித்தனர்.

மேலும் அன்று மூன்று முனிவர்களும் ஒரே பீடத்தில் அமர்ந்து நடராசருடன் சிதம்பர சிவகங்கை தீர்த்தத்தில் நடக்கும் தீர்த்தவாரியில் கலந்த கொள்வார்கள்.

அங்கு நடனமும் நடைபெறும். இதைக் காண்பது சிறந்த புண்ணியம்.

குருவாகவும் திருவாகவும் விளங்கும் முருகப் பெருமானையும் தட்சிணாமூர்த்தியையும் வணங்குவது கல்வி கலைகளில் சிறக்க உதவும்.

ஜோதி தரிசனம்

வடலூரில் தைப்பூசத்தன்று அருட்பெரும் ஜோதி விழா நடைபெறும். மாத பூசத்தில் ஆறு திரை விலக்கிக் காட்டுவார்கள். வருட பூசம் தை மாதத்தில் ஏழு திரை விலக்கி ஜோதி தரிசனம் காட்டுவதைக் காணலாம்.

1. கறுப்புத்திரை - மாயசக்தி, 2. நீலத் திரை- திரியா சக்தி, 3. சிவப்புத் திரை - இச்சாசக்தி, 4. பச்சைத் திரை- பராசக்தி, 5. பொன்திரை- ஞானசக்தி, 6. வெள்ளைத்திரை- ஆதிசக்தி, 7. பல வண்ணத்திரை- சிற்பசக்தி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com