வீரகேரளம்புதூர் நவநீதகிருஷ்ணர்

நான்கு அவதாரங்கள் சங்குசக்கரத்துடன் காட்சியளிக்கின்றன.தும்பிக்கையாழ்வார் என்ற நாமத்தோடு விநாயகர் பன்னிரு ஆழ்வார்களுடன் அமைந்துள்ளார்.
வீரகேரளம்புதூர் நவநீதகிருஷ்ணர்
Published on

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே வீரகேரளம்புதூரில் நவநீதகிருஷ்ணன் சுவாமி கோவில் உள்ளது. `நவநீதம்' என்றால் "வெண்ணெய்" எனப்பொருள். கிருஷ்ணருக்கு பிடித்தது வெண்ணை. இதனால் அவர் நவநீத கிருஷ்ணர் என பெயர் பெற்றார்.

இந்த கோவில் கர்ப்பகிரஹத்தில் "ஸ்ரீ நவநீதகிருஷ்ணன்" இரு திருக்கரங்களிலும் வெண்ணெய் ஏந்தியவாறு புன்முறுவலுடன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

கற்பூர ஆரத்தியின்போது அவரது திருமுகத்தில் தவழும் புன்னகை அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும். கர்ப்ப கிரஹத்தின் முன்பு உள்ள மண்டபத்தில் "ஸ்ரீ தேவி, பூமாதேவி நாச்சியார்கள்" சமேதராக "ஸ்ரீ நவநீதகிருஷ்ணன்" அருள்பாலித்து வருகிறார்.

கர்ப்பகிரஹத்தின் மேலே செப்புக்கலசத்துடன் கூடிய விமானம் உள்ளது. இவ்விமானத்தில் "கிழக்கு முகமாக ஸ்ரீநவநித கிருஷ்ணனும், தெற்கு முகமாக ஸ்ரீ தட்சிணா மூர்த்தியும், மேற்கு முகமாக ஸ்ரீ யோக நரசிம்மரும்,வடக்கு முகமாக ஸ்ரீ பிரம்மாவும்" எழுந்தருளியுள்ளனர்.

இத்தலத்தில் பெருமாளின் பத்து அவதாரங்களும் உள்ளனர். மச்சவதாரம், கூர்மவதாரம், வராகவதாரம், நரசிம்மவதாரம் ஆகிய நான்கு அவதாரங்கள் சங்குசக்கரத்துடன் காட்சி அளிக்கின்றன. வாமன அவதாரம் கையில் குடையுடனும், பரசுராம அவதாரம் கையில் கோடாரியுடனும், ராம அவதாரம் வில்லன்புடனும், பலராமன் அவதாரம் கலப்பையுடனும், கிருஷ்ணவதாரம் கையில் வெண்ணையுடனும் இருக்கின்றன.

கல்கி அவதாரம் கையில் கேடயமும், வாளும் ஏந்தியிருக்கிறது. இந்து மதத்தில் நல்ல உடல்நலத்திற்காக வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் தன்வந்திரி ஒன்றாகும். விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் இந்த வடிவம் , தசாவதாரத்திற்குள் சேருவதில்லை. பெரும் புகழ்வாய்ந்த விஷ்ணு கோவில்களில் மட்டும் தன்வந்திரி (தனிக்கோயிலில்) காணப்படுகிறார்.

இந்து மத வேதங்கள் மற்றும் புராணங்கள் தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் கடவுள் என்றும் குறிப்பிடுகிறது.

இங்கு இத்திருக்கோயிலின் தன்வந்திரி பகவான் தனி சன்னதியில் உள்ளார். பிரணவ சொரூபியான விநாயகப்பெருமான் தும்பிக்கையாழ்வார் என்ற நாமத்தோடு ஆலயத்தில் பன்னிரு ஆழ்வார்களுடன் அமைந்துள்ளார்.வைணவத்தை வாழவைத்த ராமானுஜர் தனி சன்னதியில் உள்ளார். உற்சவமூர்த்திக்கு எதிரில் "பெரிய திருவடி"என்றழைக்கப்படும் "ஸ்ரீ கருடாழ்வார்" பெருமாளை நோக்கி கைகூப்பி வணங்கிய நிலையில் எழுந்தருளி உள்ளார்.

உற்சவர் எழுந்தருளி உள்ள மண்டபத்தின் வடக்குத் தூணில் "சிறிய திருவடி" என்று போற்றப்படும் "ஸ்ரீ ஆஞ்சநேயர்" அருள்பாலிக்கிறார்.பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்திற்கு பத்து நாட்களுக்கு முன்பாக கொடியேற்றமும் உத்திரம் அன்று தேரோட்டம் நடைபெறுகிறது. மொத்தம் பதினொரு நாட்கள் திருவிழா நடைபெறும்.

தை பொங்கல் மறுநாள் பாரிவேட்டையும்,தசராவில் பத்து நாட்களுக்கு கொலு வைபவும் ,வைகுண்ட ஏகாதசியில் சொர்க்க வாசல் திறப்பு விழாவும் ,கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் அன்று சொக்கபனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும். தமிழ் மாதம் கடைசி சனிக்கிழமையும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். வாரத்தில் புதன், வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் கிருஷ்ணருக்குரிய அனைத்து விழாக்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் கிருஷ்ணருக்குரிய விசேஷ நாட்களில் இத்தலத்திற்கு வந்து அருகில் உள்ள சிற்றாற்றில் நீராடி விட்டு கிருஷ்ணரை தரிசித்து, பால்பாயாசம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கிருஷ்ணர் தன்னைப்போலவே ஒரு அழகான குழந்தை பிறக்க வரமளித்திடுவார் என்பது ஐதீகம்.

இந்த கோவிலில் தல விருட்சமாக நெல்லி மரம் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com