தலத்தின் சிறப்பு

ஸ்ரீகாளிகாம்பாளை ரிஷிகளும், தேவர்களும் வணங்கியதாகப் புராணங்கள் சொல்கின்றன.‘‘முக்தி தரும் நகரங்களுள் முக்கியமாம் காஞ்சி நகர்’’
தலத்தின் சிறப்பு
Published on

''தொண்டை வள நாடு சான்றோருடைத்து'' என ஒளவைப் பிராட்டியாரால் சிறப்பிக்கப்பட்ட தொண்டை மண்டலத்தில், காஞ்சி மாநகரத்தில் அமர்ந்துள்ள ஸ்ரீகாமாட்சி தனது இச்சா மந்திரத்தால் பன்னிரண்டு திருத்தலங்களில் காட்சி தந்து கருணைபுரிகின்றாள். அவ்வண்ணம் அமர்ந்த திருத்தலங்களில் ஒன்றாக விளங்குவது ஸ்ரீகாளிகாம்பாள் அமர்ந்துள்ள பரதபுரி என்றழைக்கப்படும் இத்தலமாகும்.

''முக்தி தரும் நகரங்களுள் முக்கியமாம் காஞ்சி நகர்'' என்ற திருத்தலத்துக்கு ஈசான்யப் பாரிசமாகவும், திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற திருமயிலைக்கு வடக்குப் பாரிசமாகவும், மகத்துவமிகுந்த திருவொற்றியூருக்குத் தென் பாரிசமாகவும், பாலாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் எழுந்தருளியுள்ள திருவேற்காட்டிற்கு நேர் கிழக்காகவும் அமைந்துள்ளது இத்திவ்யத் தலமாகும்.

இத்தலத்தைப் பற்றி, மச்சபுராணம், வாமன புராணம், கூர்ம புராணம், லிங்க புராணம் மற்றும் பவிஷ்ய புராணங்களில் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. இத்திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீகாளிகாம்பாளை ரிஷிகளும், தேவர்களும் வணங்கியதாகப் புராணங்கள் சொல்கின்றன.

வியாசர், பராசர், அகத்தியர், ஆங்கிரேசர், புலஸ்தியர் மற்றும் வருணன் முதலான முனிசிரேஷ்டர்களும் தேவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். மேலும், செல்வத்துக்கதிபதியான குபேரன் இத்தலம் வந்து ஸ்ரீ காளிகாம்பாளை வழிபட்ட பின்னர்தான் குன்றாத பெருஞ் செல்வங்களைப் பெற்றான் என்ற புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன.

ராஜ கோபுரம்

22.1.1976 அன்று தவத்திரு சுவாமி ராமதாசர் மற்றும் அறங்காவலர் குழுத் தலைவர் பிரம்மஸ்ரீ டி.எஸ்.ராஜப்பா தலைமையில் ராஜகோபுரத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு 21.1.1983 அன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அவ்வாறே ராஜகோபுரத்தின் வாயிலுக்கு உட்புறம் இருந்த திறந்த வெளியில் ஸ்ரீகாயத்ரி மஹா மண்டபத்தில் 20.11.1982 அன்று மண்டபத் திருப்பணி தொடங்கப்பட்டு விரைவில் முடிக்கப்பட்டது.

மேற்கு நோக்கிய சன்னதி

அன்னையின் ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது ஏன்? எதற்கு? என்ற வினா நம்முள் எழுகின்றது. ஆம். உண்மையே. கிழக்கு (பூர்வாபி முகம்) நோக்கிய சன்னதிக்கு எத்துணை சிறப்புகள் உண்டோ அத்துணை சிறப்புகளைக் காட்டிலும் கூடுதலாக மேற்கு நோக்கிய (பச்சிமாபி முகம்) சன்னதிக்கு உண்டு. பாரத நாட்டில் மேற்கு நோக்கிய சன்னதிகள்

1. காசி - விஸ்வேஸ்வரர்

2. திருக்காளத்தி - காளத்தி நாதர்

3. சென்னை - ஸ்ரீகாளிகாம்பாள்

4. திருமயிலை - கபாலீஸ்வரர்

5. திருவான்மியூர் - வான்மீகிநாதர் (மருந்தீஸ்வரர்)

6. திருக்காஞ்சி - வரதராஜப்பெருமாள்

7. திருவாணைக்கா - ஜலகண்டேஸ்வரர்

8. திருச்சி - தாயுமானவர்

9. பழனி - முருகப்பெருமான்

இதுபோன்ற ஆதாரங்களை ஆய்ந்து பார்க்கின்ற போது இவைகள் அனைத்தும் விஸ்வகர்மாவால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனவே, மேற்கு பார்த்த சன்னிதானங்கள் அனைத்தும் விஸ்வகர்ம செழுமரபினர்கட்கு பாத்தியப் பட்டது. பிரதிஷ்டை செய்யப்பட்டதும் போற்றி வழி பாடாற்றப்படுவதும் ஆகும் என்பது ஆராய்ச்சியாளர்களின் துணிவு.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com