வெண்கல கிண்ணித் தேர் வரலாறு

தேவியின் ஸ்ரீசக்கரத்தை குறிப்பதே வெண்கல கிண்ணித்தேர்.அம்பாள் கிண்ணித்தேரில் வீதியுலா
வெண்கல கிண்ணித் தேர் வரலாறு
Published on

தேர், திருவீதி உலா வருவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் கிண்ணித் தேரின் பவனியைப் பார்த்திருக்கிறோமா? இந்தியாவிலேயே வேறெங்குமில்லாத புகழ் பெற்ற கிண்ணித் தேரினை அருள்மிகு ஸ்ரீகாளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோவிலில்தான் காண முடியும். எதற்கும் ஒரு வரலாறு உண்டு. அதைப் போல இந்தக் கிண்ணித் தேருக்கும் வரலாறு உண்டு.

சென்னம்மன் குப்பம், மதராசி குப்பம், ஆறு குப்பம், மேல்பட்டு என்னும் பகுதிகளே இன்றுள்ள சென்னப்பட்டினம் ஆகும். சென்ன - அழகிய அம்மாள் - தாய். இச்சென்னம்மனே இன்றுள்ள காளிகாம்பாளது முதற் பெயர். இவளது பெயரால் முன்னைய சென்னை ராஜ்யமும் தலைநகரும் உண்டாயின.

எச்.டி.லோவ் எழுதிய மதராஸ் வரலாற்றில் சென்னம்மன் கோவில் மூலவரை கல்யாணி என்றும் கவுரிம்மன் என்றும் பக்தர்கள் அழைத்தனர் என்று குறிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிகப்பழைய கோவில் காளிகாம்பாள் கோவிலே என்றும் காலம் காண முடியவில்லை. காலங்கடந்தது என்றும் சரித்திர ஆசிரியர் கூறுவர். கி.பி. 1640-ல் காளத்தீஸ்வரர் கோவிலும் கி.பி. 1725-ல் கச்சாலீஸ்வரர் கோவிலும் கட்டப்பட்டன.

400 ஆண்டுகளுக்கு முன்பெ சீரும் சிறப்புமுற்று ஸ்ரீ காளிகாம்பாள் கோவிலில் நடந்த பெருவிழாவில் வெண்கலக் கிண்ணித் தேர் ஓடிற்று. அயல் நாட்டினரும் இத்தேரின் ஓசை கேட்டு மயங்கினர். 24-9-1641ல் சென்னை ஆட்சி ஆங்கில ஏஜென்சியிடமிருந்த போது வலக்கை இடக்கை ஜாதியினர் ஊர்வலம் வரும் விதிகளுக்காகப் பூசலிட்டனர். கி.பி. 1643 கிரீன் ஹில்ஸ் சமாதானம் செய்தார். உடன் பாட்டால் கிண்ணித் தேர் ஓடியது. தேவியின் ஸ்ரீசக்கரத்தைக் குறிப்பதே வெண்கலக் கிண்ணித்தேர் ஆகும்.

கி.பி. 1655 வலக்கையர் இடக்கையர் அறியாமையால் சண்டையிட்டனர். ஆங்கிலேயர் இந்த இரு திறத்தாரையும் கூட்டிக்கொண்டு போய் காஞ்சி காமகோட்டத்தில் காமாட்சியின் வலப்பக்கத்தில் வலக்கை ஜாதியினரையும் இடப்பக்கத்தில் இடக்கை ஜாதியினரையும் நிற்க வைத்து ஊர்வலத்தில் சண்டையிடக்கூடாது என உடன்படிக்கையில் கையெழுத்திடச் செய்தனர். ஸ்ரீ காஞ்சி காமாட்சியின் பெரில் ஜாதியினர் சத்தியம் செய்தனர். மறுபடியும் கிண்ணித் தேர் மராட்டியர் டவுனில் (முத்தியாலுப்பெட்டை, பகடாலுப்பெட்டை) உலா வந்தது.

கிண்ணித் தேர் விழா, முதல் கவனர் பிட் நிறுத்தினார் சென்னை இரண்டாம் கவர்னர் சாண்டர்ஸ் காளிகாம்பாள் கோவிலுக்கு விஜயம் செய்து 21-9-1790ல் தாமும் தேரின் வடத்தைக் கையால் பற்றி இழுத்து பக்தர்களோடு பரசவப்பட்டார். அம்பாள் கிண்ணித்தேரில் வீதியுலா கண்கொள்ளாக் காட்சியாகும். அடியேனும் சிறு வயதில் கண்டும் கேட்டும் களித்துள்ளேன். வெண்கலத் தட்டுகளின் ஓசையும் ஒலியும் பக்தர்களை மெய்மறக்கச் செய்யும் என்பது உண்மை. வெறும் புகழ்ச்சி இல்லை.

இந்தியாவில் மிகப்பெரிய வெண்கலக் கிண்ணித் தேர் சென்னைபுரி ஸ்ரீகாளிகாம்பாள் கோவிலில் உள்ளதே, கடலூரிலும் பாண்டியன் சேரியிலும் (புதுச்சேரி) கிண்ணித் தேர்கள் உள்ளது. இத்தேரினை ஸ்ரீ சக்கர ரதம் என்பர் பெரியோர். கி.பி. பதினோறாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் தனி அம்மன் கோவில்கள் உண்டாயின.

பின்னரே சாமி, அம்மன் கோவில்கள் சிவசக்தி தத்துவம் கண்டன. காமேஸ்வரர் அல்லது கமடேஸ்வர் (சிவன்) பிரகாசத்தை காமேஸ்வரி, சிவகாமி, காமகோடி, வனிதா, திரிபுரசுந்தரி விமர்ஸா இவை இரண்டினையும் சேர்த்தே ஸ்ரீசக்கரம் தோன்றியது. ஸ்ரீசக்கரம் இரு வகை முக்கோணங்களையுடையது.

ஒரு வகை ஆண்பால் (சிவன்) குறிக்கும் நான்கு முக்கோணங்களாம். மற்றொரு வகை பெண்பால் குறிக்கும் ஐந்து முக்கோணங்களாம். இவைகளின் உச்சியே பிந்து ஸ்தானம் எனப்படும். அந்த நடுவண் வீற்றிருப்பவர்களே என்றும் பிரியாத காமேஸ்வரர் வனிதா எனப்படுவோர். இத்தகைய ஸ்ரீ சக்கரத்தை ஆதிசங்கரர் முக்கிய சக்தி ஆலயங்களில் ஸ்தாபித்தார். காஞ்சி காமாட்சி முன்னர், குற்றாலத்தில் ஸ்ரீ சங்கர பீடம் ஆவுடையார் கோவில் மூலத்தில், சென்னை காளிகாம்பாள் கோவில் காளியம்மன் முன்னர் இன்றும் அவைகளைக் காணலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com