அகத்தியருக்கு தமிழ் கற்றுக்கொடுத்த முருகன்
முருகப் பெருமான் அகத்தியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததாகவும், மதுரை தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராகவும் வீற்றிருந்து தமிழ் வளர்த்ததாகவும் கூறப்படுகிறது.
தெய்வ யானை கிரியா சக்தியாகவும் வள்ளி இச்சா சக்தியாகவும் வேல் ஞான சக்தியாகவும் மயில் ஆணவம் என்றும் சேவல் சிவஞானம் என்றும் கூறுவார்கள்.
சிவபெருமானின் நெற்றிக்கண் தீப்பொறியில் இருந்து அவதரித்த சிவக்குமரன், சக்தி பார்வதிதேவி சேர்த்தெடுத்து ஞானப்பாலூட்டி வளர்த்த சக்திமைந்தன் தான் முருகன்.
இவர் விநாயகப்பெருமானின் இளைய சகோதரன், ஐயப்ப சுவாமியின் அண்ணன்.
திருமாலின் மருமகன், இந்திரனின் மாப்பிள்ளை, தேவயானை எனும் தேவியின் கணவன்.
வள்ளிக்குற மகளின் காதலன், வீரபாகு முதலான நவ வீர வாகுத் தேவர்கள் 9 பேரின் தோழன், தேவர்களுக்கு இன்னல்கள் விளைத்த தாரகா சூரன் சிங்கமுகன் சூரபதுமன் முதலான அசுரர்களை அழித்தவன்.
அகத்திய முனிவருக்கே தமிழ் இலக்கணம் போதித்த முதல் ஆசிரியன்,
அவ்வைப் பிராட்டிக்கு தத்துவ ஞானத்தை நாவல்பழம் மூலம் போதித்தவன்.
நக்கீரர், அருணகிரியார், குமரகுருபரர், கச்சியப்பசிவ சாரியார் போன்ற ஞானிகளுக்கே தமிழ் நூல்கள் எழுத போதித்த சற்குரு.
அப்பனுக்கே ஞானம் சொன்ன சுப்பன். தமிழகத்திற்கும் தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் உண்மையான தமிழ்த் தலைவன்,
வடக்கே பிறந்து தெற்கே வந்தாலும் முற்றிலும் செந்தமிழ் நாட்டிற்கே உரியவன்.

