ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்- திருப்பட்டூர்

சக்தியுடன் தனி சந்நிதியில் காட்சியளிக்கிறார். சகலவிதமான சர்வ தோஷ பரிகாரத்தலமாகும்.
ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்- திருப்பட்டூர்
Published on

பெரும் சிறப்புடைய சோழநாட்டின் ஒரு பகுதியாய் இருந்த பொன்னி நதியும், காவிரி நதியும் பாயும் தென் தமிழ்நாட்டின் நடுநாயகமாய் வீற்றிருக்கும் திருச்சி மாவட்டத்தின் வடகரையில் சுமார் திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் 25 கி.மீ தொலைவில் சிறுகநூருக்கு மேற்கில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் திருப்பட்டூர் அமைந்துள்ளது. இவ்வூரில் பழமையும் பெருமையும் மிக்க ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.

ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்- ஈசன்

கிழக்கு நோக்கிய சன்னிதி, சுயம்பு மூர்த்தி, அழகிய தோற்றம், மேலே தாராபாதிரம், நாகாபரனத்துடன் கூடிய சதுர ஆவுடை கூடிய திருமேனி, ஸ்ரீ பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி அருள் புரிந்ததால் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.

ஸ்ரீ பிரம்மன் வரலாறு

நாத மண்டபத்தின் தென்புறம் சென்றால் மிகப்பெரிய கிழக்கு நோக்கிய ஸ்ரீ பிரம்மா சன்னிதி. பிரம்மனுக்கு கோவில்கள் இல்லை என்பது பொதுவான கருத்து. ஆனால் பிரம்மன் இல்லாத சிவ ஆலயம் இல்லை என்பது தான் உண்மை. எல்லா சிவ ஆலயத்திலும், ஈசனின் இடப்புறத்தில் அபிஷேக தீர்த்தம் வரும் வழியில் கோஷ்டமூர்த்தியாக இருந்து வருகிறார்.

ஆனால் திருபட்டூரில்மட்டுமே மிகப்ப்ரம்மாண்டமாக அதுவும் தலையெழுத்தை மங்களகரமாக மாற்றும் சக்தியுடன் தனி சந்நிதியுடன் காட்சியளிக்கிறார். பிரம்மன் ஒருமுறை இந்த உலகத்தை படைக்கும் சக்தி தன்னிடம் உள்ளது , மேலும் ஈசனுக்கும் ஐந்து தலை, தனக்கும் ஐந்து தலை என நான் எனும் அகங்காரத்துடன் ஈசனை மதிக்காத போக்கு தென்பட்டது.

ஈசன் பிரம்மனுடைய அகங்காரத்தை அழித்து அவரின் நிலையை உணர வைக்க எண்ணினார். ஆகவே, "பிரம்மனே ஐந்து தலை என்பதால் அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய் " என்று அவருடைய ஒரு தலையை கொய்துவிட்டு தேஜஸ் இழக்கக்கடவாய் என்று சாபம் இட்டார். பிரம்மன் தேஜஸ் இழந்ததால் படைப்பாற்றலையும் இழந்தார்.

தன நிலையை உணர்ந்த பிரம்மன் திருபட்டூரில் துவாதச சிவலிங்கங்களை (பன்னிரண்டு) பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார். ஆகா பிரம்மனின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன் பிரம்மனின் படைப்பாற்றலையும் திரும்ப வழங்கி கூடுதலாக ஒரு வரம் வழங்கினார்.

பிரம்மனே உன்னுடைய வழிபாட்டில் மகிழ்ந்த யாம் எல்லோருடைய தலையெழுத்தை நிர்ணயிக்கும் உன்னுடைய தலையெழுத்தை மாற்றியது போல் இங்கு வந்து உன்னை வழிபாடு செய்பவர்களுக்கு மீண்டும் ஒருமுறை அவர்களுடைய "தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக " என்று வரமளித்தார். "விதி இருப்பின் விதி கூட்டி அருளுக " என்றும் வரம் வழங்கினார்.

பரிகார தலம்

நம் ஒவ்வொருவருடைய ஆசையுமே நாம் தற்பொழுது இருக்கும் நிலையை விட மிகச் சிறப்பாகவும், நல்ல ஆரோக்கியம் , செல்வா நலத்துடன் வாழ வேண்டும் என்பதே. அதற்கு இத்தலத்து ஸ்ரீ பிரம்மாவை நேராக வந்து பார்த்தாலே போதும். நலம் பல வழங்கி நல்வாழ்வு நல்குவர்.

ஸ்ரீ பிரம்மாவை வழிபாடு செய்ய உகந்த நாட்கள்

திங்கள், வியாழன், திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் நம்முடைய பிறந்த நட்சத்திரத்தன்று இவ்வாலயத்திற்கு வந்து வழிபாடு செய்தல் சிறப்பு. தலையெழுத்தையே மாற்றுவார் என்பதால் சகலவிதமான சர்வ தோஷ பரிகாரத்தலமாகும்.

பரிகார முறை

முதலில் இத்தலத்திற்கு வருகை தருதல் வேண்டும். பின்னர் ஈசன், பிரம்மன், அம்மன் ஆகியோரை தரிசித்து விட்டு, முப்பத்தி ஆறு தீபமிட்டு ஒன்பது முறை வளம் வந்து வேண்டுதல் வேண்டும். ஒவ்வருவருடைய ஜாதகத்தை பிரம்மன் பாதத்தில் வைத்து வேண்டுதல் செய்தல் அது அவ்வாறே நடக்கும் என்பது ஐதீகம். இவ்வாறு வேண்டி பலன் பெற்றோர் பல பேர் உள்ளனர்.

பொதுவான பரிகாரம்

கணவன் மனைவி பிரிந்தவர் கூடுதல், துர்மரணம், வியாபாரத்தில் நஷ்டம், திருமணத் தடை, பிள்ளைகள் இழப்பு, கல்வியில் பாதிப்பு, வறுமை, குழந்தைஇன்மை, மன வியாதிகள், பூரண ஆயுள், என்ற நிலையில் உள்ளவர்கள் இத்தலத்து ஸ்ரீ பிரம்மாவை நேராக நின்று தரிசிதாலே போதும் சகல தோஷங்களும் நீங்கி "திருபட்டூர் வந்தோம் திருப்பம் நிகழ்ந்தது " என்ற நல்ல மங்களகரமான நிலை அடையலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com