சங்கரன்கோவில் கோமதி அம்பாள் கோவில் ஸ்தல வரலாறு....

சிவன், அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர், சன்னதி உள்ளது. அம்பாள் சந்நிதிகளில் பீடத்திற்கு அடியில் அல்லது அம்பிகையின் பாதம் முன்பு ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம்.
சங்கரன்கோவில் கோமதி அம்பாள் கோவில் ஸ்தல வரலாறு....
Published on

மூலவர் - சங்கரலிங்கம்

அம்மன் - கோமதி அம்மன்

தல விருட்சம் - புன்னை

தீர்த்தம் - நாகசுனை தீர்த்தம்

ஊர் - சங்கரன்கோவில்

மாவட்டம் - திருநெல்வேலி

அரியும் சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்க அம்பாள் பார்வதி, "கோமதி" என்னும் பெயரில் பூலோகம் வந்து தவமிருந்த இடமே சங்கரன்கோவில். சங்கன் என்னும் நாக அரசன் சிவன் மீதும், பதுமன் என்ற அரசன் திருமால் மீதும் பக்தி கொண்டிருந்தனர். இருவருக்கும் சிவன் பெரியவரா திருமால் பெரியவரா என்ற வாதம் எழுந்தது.

தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர். இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு காட்ட, இருவரும் இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருந்தாள். அவளுடன் தேவர்கள் பசுக்கள் வடிவில் வந்து வணங்கி வந்தனர். பசுவை ''கோ" என்பர். தவக்காலத்தில் அம்பாளின் முகம் "மதி" போல் பிரகாசித்தது. எனவே அவள் "கோமதி" எனப்பட்டாள். "ஆவுடையம்மாள்" என்றும் இவளை அழைத்தனர்.

"ஆ" என்றால் "பசு". "பசுக்களை உடையவள்" என்று பொருள். இதையடுத்து, இருவரும் ஒன்றாக இணைந்து சங்கரநாராயணராக காட்சி தந்தனர். பின்னர், அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவன், சங்கரலிங்கமாகவும் எழுந்தருளினார். திங்கள் கிழமைகளில் கோமதி அம்பாளுக்கு மலர் பாவாடை, வெள்ளிக்கிழமையில் தங்கப்பாவாடை அணிவிப்பர்.

திருமண, புத்திரதோஷம் உள்ளவர்கள் மாவிளக்கு ஏற்றுவர். அம்பாள் சந்நிதிகளில் பீடத்திற்கு அடியில் அல்லது அம்பிகையின் பாதம் முன்பு ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். ஆனால், இங்கு அம்பாள் சந்நிதி முன் மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை, ''ஆக்ஞா சக்ரம்" என்கின்றனர்.

கோவில் அமைப்பு...

சிவன், அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர், சன்னதி உள்ளது. சிவனுக்குரிய வலப்பாகத்தில் தலையில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடியும் உள்ளன. காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை இருக்கிறது. திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி இருக்கிறான்.

திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி மற்றும் இலட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் இருக்கிறது. இவர் பக்கமுள்ள திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான். இச்சன்னதியில் காலை பூஜையில் மட்டும் துளசிதீர்த்தம் தரப்படும்.

மற்ற நேரங்களில் விபூதி தருகின்றனர். பூஜையின் போது சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலைகளை அணிவிக்கிறார்கள். சிவன் அபிஷேகப்பிரியர். திருமால் அலங்காரப்பிரியர். எனவே திருமாலுக்கு உகந்த வகையில் மூலவர் சங்கரநாராயணர் எப்போதும் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது.

இச்சன்னதியில் ஸ்படிகலிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவராத்திரி, ஏகாதசி நாட்களில் உற்சவருக்கு அபிஷேக, பூஜை நடக்கும். ஆடித்தபசு விழாவன்று மட்டும் அம்பாளுக்கு காட்சி தர இவர் வெளியேபுறப்பாடாகிறார். மனநோய், மனக்குழப்பம் உள்ளவர்கள் இதன் மேல் அமர்ந்து அம்பிகையிடம் வேண்டிக் கொள்கிறார்கள் ஆடித்தபசு விழா, 12 நாட்கள் நடக்கும்.

அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கரநாராயணர் இவளுக்கு காட்சி தருவார்.

கோவில் நடை திறக்கும் நேரம்: காலை 5 மணி முதல் - 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் - இரவு 9 மணி வரை. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com