தோஷம் நீக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயர் ஐந்து முகவடிவில் உள்ளார்.பரயந்த்ர பரமந்த்ர தோஷங்களை போக்க அவதரித்த முகம்.
தோஷம் நீக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர்
Published on

அனைத்து கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய வல்லமை மிக்கவர் பஞ்சமுக அனுமன். அனுமனின் ஐந்து முகங்களான கருடமுகம் பிணி நீக்கும், வராகமுகம் செல்வம் அளிக்கும், அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லாநலமும் தரும், நரசிம்மமுகம் தீமையைப் போக்கும், ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் நல்கும் என்பதால்,

வேண்டியதை வேண்டியவாறு அருள்கிறார் அஞ்சிலே ஒன்று பெற்ற அருள் குமரன் அனுமன். அனுமனின் தாடை நீண்டு இருக்கும். ஹனுமன் முகம், நரசிம்ம முகம், கருடன் முகம், வராஹமுகம், ஹக்கிரீவர் முகம் என ஆஞ்சநேயர் ஐந்து முகவடிவில் ஒருங்கிணைந்து உள்ளார்.

கிழக்கு முகம் ஹனுமனாக சத்ருக்களை அழிக்க வந்த முகம் "பிரதிவாதி முகஸ்நம்பி'' என்ற சுலோக வரியினால் அனுமனை வேண்டினால் எதிரிகள் விலகுவர் என பொருள் தரும். தெற்கு முகம் நரசிம்ம முகம். இம்முக ரூப ஆஞ்சனேயர் பயத்தினால் உண்டாகும் பிரச்சனைகள்,

பில்லி சூன்யம் துஷ்ட தேவதைகளால் உண்டாகும் பரயந்த்ர பரமந்த்ர தோஷங்களை போக்க அவதரித்த முகம். மேற்கு முகம் கருடன் முகத் தரிசனம் சரும நோய், விஷ நோய், ஊழ்வினை நோய்களை போக்கி அருள்தரும். வடக்கு முகம் வராஹமுகத் தரிசனம், தீராத கடன்,

பொருள் இழப்பு விஷ சுரம், மர்ம நோய்கள் முதலியனவற்றை அழித்து சாந்தியும், நிம்மதியும் தரவல்லது. பொருளாதார மேன்மை உண்டாகும். மேல் முகம் ஸ்ரீஹயக்கிரீவர் முகம்.

இம்முக ஆஞ்சநேயர் சகல கலைகளையும், சிறந்த ஞானத்தையும், சொல்வன்மையையும், சகல கலா வல்லவனாக தேர்ச்சியையும் தருபவர். சொல்லின் செல்வன் என சீதையால் போற்றப்பட்ட அனுமனை பஞ்சமுக ஆஞ்ச நேயராக வழிபாடு செய்யும் போது உங்களுக்கும் சொல் வன்மை, ஆரோக்கியம், எதிரிகள் விலகல் என அனைத்தும் உண்டாகும். பஞ்சமுக ஆஞ்சநேயர் திருநள்ளார் நள தீர்த்தத்தில் இருந்து வரும் வழியில் அருள் தருகின்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com