ஜோதி தரிசனம்

ஆடித்திருவிழா மொத்தம் 14 வாரங்கள் நடைபெறுகிறது.பவானிதாய், நமக்கு ஜோதி வடிவில் காட்சி கொடுப்பதாக ஐதீகம்.
ஜோதி தரிசனம்
Published on

தமிழ்நாட்டில் எந்த கோவிலிலும் இல்லாத வகையில், பெரியபாளையத்தம்மன் கோவிலில் ஆடித் திருவிழா மொத்தம் 14 வாரங்கள் நடைபெறுகிறது.

இந்த 3 மாத காலக்கட்டத்தில் 15 ஞாயிற்றுக்கிழமைகள் வருகிறது. இந்த கிழமைகளில் ஒவ்வொரு வகை வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெறும்.

இது தவிர பெரியபாளையம் கோவிலில் 15 ஞாயிற்றுக்கிழமையும் அம்மனின் ஜோதி தரிசனம் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. இது பெரியபாளையம் கோவிலில் மட்டுமே நடைபெறும் பிரத்தியேக ஆடி சிறப்பு வழிபாடாகும்.

பாளையத்தம்மனை ஜோதி ஒளியில் வழிபடுவதே இதன் முக்கிய அம்சமாகும். அந்த சமயங்களில் பவானிதாய், நமக்கு ஜோதி வடிவில் காட்சிக் கொடுப்பதாக ஐதீகம்.

ஆடித் திருவிழாவின் சனிக்கிழமைகளில் இரவு 12 மணிக்கு இந்த ஜோதி தரிசன நிகழ்ச்சித் தொடங்கும். முதலில் பாளையத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படும்.

அதன்பிறகு திரையிடப்பட்டு அம்மனை அலங்கரிப்பார்கள். வித, விதமான பூக்களால் புஷ்ப அலங்காரம் செய்வார்கள்.

இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு நைவேத்தியம் படைக்கப்படும். இவை அனைத்தும் முடிந்ததும் ஜோதி தரிசனம் தொடங்கும்.

அம்மனுக்கு மொத்தம் 16 வகை தீபாரதனைகள் காட்டப்படும். ஒவ்வொரு தீபராதனையின் போதும் பாளையத்தம்மன் ஒவ்வொரு விதமாக ஜொலித்து நமக்குக் காட்சி கொடுப்பாள். அந்த திருக்காட்சியைக் காண கண்கோடி வேண்டும்.

16 வகை தீபாரதனை முடிந்ததும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்படும். அதைத் தொடர்ந்து அம்மனுக்கு மீண்டும் நைவேத்தியம் படைக்கப்படும்.

அத்துடன் ஜோதி தரிசன நிகழ்ச்சிகள் நிறைவு பெறும். இறுதியில் வந்துள்ள பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி வரை இவை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஜோதி தரிசனத்தின் சிறப்பு என்னவென்றால் இது பெரியபாளையம் கோவிலில் ஆடி பெருவிழா நடக்கும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே நடைபெறும். மற்ற மாதங்களில் இத்தகைய தரிசனம் கிடையாது.

எனவே இந்த ஆண்டு ஜோதி தரிசனத்தை தவற விட்டு விட்டால், இனி அடுத்த ஆண்டு வரும் ஆடிப் பெருவிழாவில்தான் பாளையத்தம்மனை ஜோதியாக தரிசனம் செய்ய முடியும்.

சனிக்கிழமை இரவு 12 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கியமை அதிகாலை 3 மணி வரை ஜோதி தரிசன பூஜைகள் நடக்கும் என்பதால் வெளியூர்களில் இருந்து பெரியபாளையத்துக்கு வரும் பக்தர்கள் அதற்கு ஏற்ப வசதிகளை செய்து கொண்டு வருவது நல்லது.

கோவில் நிர்வாகம் சார்பில் இந்த ஜோதி தரிசன வழிபாட்டுக்கு ரூ.250 கட்டணம் நிர்ணயித்துள்ளனர். இது தொடர்பான மேலும் தகவல்களை கோவில் அலுவலகத்தை 044-27927177 மற்றும் 9444487487 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com