செல்வமும், குழந்தையும் தரும் குரு பகவான்

ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.குருவுக்கு பிரகஸ்பதி என்றும் ஒரு பெயர் உண்டு.
செல்வமும், குழந்தையும் தரும் குரு பகவான்
Published on

ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுபகிரகம் என்ற அமைப்பையும் பெருமையையும் பெற்ற ஒரே கிரகம் குருபகவான் ஆவார். இவர் தேவர்களுக்கெல்லாம் தலைவன் என்று கருதப்படுகிறார். இதனால் இவருக்கு பிரகஸ்பதி என்றும் ஒரு பெயர் உண்டு.

நம் வாழ்வில் இரண்டு விஷயங்கள் முக்கியமானது. அதாவது பணம், இரண்டாவது குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்கக்கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு.

குருவிற்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. மதிநுட்பம், பதவி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால்தான் இந்த துறைகளில் பிரகாசிக்க முடியும்.

குருபலம்

திருமணம் முடிவாவதற்கு மிக முக்கிய கிரகமாக குருபகவான் திகழ்கிறார். குரு பார்வை திருமணத்திற்கு முக்கியமாக தேவைப்படுகிறது. குரு பலம் வந்துவிட்டதா என்று பார்த்தபிறகே பலரும் திருமண விஷயங்களை ஆரம்பிக்கிறார்கள்.

குருபகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.

குரு இட தோஷம்

குரு எந்த இடத்தில் இருந்தாலும் ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்ந்து இருக்க வேண்டும். குறிப்பாக லக்னம், இரண்டு, ஐந்து, ஏழு ஆகிய வீடுகளில் தனித்து இருக்கக்கூடாது. தனியாக இருப்பது சிறப்பானது அல்ல. ஒருவரது ஜாதகத்தில் குருபகவான் நல்ல ஸ்தான, ஆதிபத்தியம் பெற்று ராசி, அம்சத்தில் பலம் பெற்று அமர்ந்துவிட்டால் அந்த ஜாதகருக்கு அந்த ஒரு பலமே போதுமானது.

குரு இருக்கும் இடத்தை பொறுத்து கவுரவம், செல்வாக்கு, பட்டம், பதவிகள், தானாக தேடி வரும். ஆன்மிக விஷயங்களில் ஒருவரை ஈடுபட வைப்பதிலும் குருவுக்கு முக்கிய பங்கு உண்டு. மதபோதகர், மத பிரசாரகர், சொற்பொழிவாளர், கதாகாலட்சேபம் போன்றவற்றில் முன்னிலைப்படுத்துவார். கோயில் கட்டுதல், கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தி வைத்தல். அறங்காவலர் பதவி, தர்மஸ்தாபனம் அமைத்தல் போன்ற பாக்கியத்தை அருள்வார்.

தலை சிறந்த வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் இருப்பவர்கள் குருவின் பரிபூரண அருள் பெற்றவர்களாக இருப்பார்கள். கல்வித்துறை, நிதி, வங்கி, பைனான்ஸ், நீதித்துறை போன்றவற்றில் பணி செய்யக்கூடிய பாக்கியத்தை அருள்பவரும் குருபகவானே.

பரிகாரம் என்ன?

குருபகவானின் பரிபூரண அருள் வேண்டுபவர்கள் அனைத்து முருகன் தலங்களுக்கும் சென்று வணங்கலாம். குறிப்பாக அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் முருகப்பெருமான் குரு வடிவாகவே அருள்புரிகிறார்.

கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி குருவிற்குரிய சிறப்பு பரிகார தலமாகும். நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார்திருநகரி குரு தலமாகும். எல்லா சிவன் கோயில்களிலும் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை மஞ்சள் ஆடை அணிவித்து கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்யம் செய்து வணங்கி வழிபடலாம்.

'ஓம் பிம் சிவய வசி குரு தேவாய நம' என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லிவர தடை, தடங்கல்கள் நீங்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com