ஆடிக் கிருத்திகையின் சிறப்பு!

நம் உடலிலும் ஆறு ஆதாரங்களிலும் நிலை பெற்றிருப்பது இந்த முருகனே என்பதே அருணகிரியார் கூற்று. கார்த்திகை விரதமே கார்த்திகைப் பெண்களை நினைத்து நன்றி செலுத்தும்விதமாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று எனக் கூறுவார்கள்.
ஆடிக் கிருத்திகையின் சிறப்பு!
Published on

முருகனுக்கு திதிகளில் சஷ்டியும், கிழமைகளில் வெள்ளிக்கிழமையும், நட்சத்திரங்களில் கிருத்திகையும் சிறப்பு.

முருகன் பிறந்தது விசாக நக்ஷத்திரம் என்று சொல்லப் பட்டாலும், அவனைப் பாலூட்டி வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை.

கங்கையாகிய ஆறு தாங்கிய ஆறு அக்னிப் பொறிகள் மூலம் ஆறுமுகங்களோடு பிறந்த முருகன் ஆறு பெண்களால் வளர்க்கப் பட்டான்.

அவன் குழந்தையாய் வளர்ந்ததும், திருவிளையாடல்கள் புரிந்ததும் ஆறு நாட்களே என்று சொல்லப் படுகிறது.

இப்படிச் சகலத்திலும் ஆறு என்னும் எண் முக்கியமாய் அமையப் பெற்ற முருகனுக்கான நாமம் "சரவணபவ" என்னும் ஆறெழுத்தே ஆகும்.

நம் உடலிலும் ஆறு ஆதாரங்களிலும் நிலை பெற்றிருப்பது இந்த முருகனே என்பதே அருணகிரியார் கூற்று.

கார்த்திகை விரதமே கார்த்திகைப் பெண்களை நினைத்து நன்றி செலுத்தும்விதமாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று எனக் கூறுவார்கள்.

சூரனை வதைக்க வேண்டி ஆறுமுகன் தோன்றியதும், அவனைக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டிப் போற்றி வளர்த்ததும், குமரன் வளர்ந்ததும், அவனை அணைத்து ஒன்று சேர்க்க உமையுடன் அங்கே எழுந்தருளிய சிவபிரான், கார்த்திகைப் பெண்களைப் போற்றி வாழ்த்தியதோடு, இனி கந்தன் இந்தப் பெண்களின் பெயரால், "கார்த்திகேயன்" எனவும் அழைக்கப் படுவான் என்று சொன்னார்.

இதைக் கந்த புராணம்,

"கந்தன் தனை நீர் போற்றிய கடனால்

இவன் உங்கள் மைந்தன் என்னும் பெயராகுக!"

என்றும் அருளியதோடு மேலும் அவர்களுக்கு நட்சத்திரப் பதவியும் அளித்து, இந்தக் கார்த்திகைப் பெண்களின் நக்ஷத்திரம் வரும் சமயம் விரதம் இருப்பவர்களுக்குக் குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும், என்று அருளிச் செய்தார்.

கார்த்திகை விரதம் இருப்பது பற்றிக் கந்த புராணத்தில்,

"நுந்தம் பகலிடை இன்னவன் நோன்றாள் வழிபடுவோர்

தந்தம் குறை முடித்துப் பரந்தனை நல்குவம் என்றான்"

எனவும் சொல்லுகின்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com