பூண்டி மாதா பேராலயத்தில் நாளை தேர்பவனி

பூண்டிமாதா பேராலயத்தில் தேர்பவனி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் கும்பகோணம் பிஷப் கலந்துகொள்கிறார்.
பூண்டி மாதா ஆலயம்
பூண்டி மாதா ஆலயம்
Published on

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி, கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே எழில் மிகு  சூழலில் அமைந்துள்ளது பூண்டி மாதா பேராலயம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டுவன எல்லாம் தரும் பூலோகம் போற்றும் பூண்டிமாதா என போற்றிவணங்கப்படும் பூண்டி மாதா  பேராலயத்தின் வருடாந்திர திருவிழா கடந்த 6-ந்தேதி தொடங்கியது.

நவநாட்கள் எனப்படும் திருவிழா நாட்களில் தினமும் மாலை சிறிய சப்பர பவனியும், திருப்பலியும் நிறைவேற்றப்பட்டன. திருவிழாவின் 8-வது நாளான இன்று(வெள்ளிக்கிழமை) மாலை மரியா-பாவிகளின் அடைக்கலம் என்ற தலைப்பில் வேளாங்கண்ணி ஆலய அதிபர் இருதயராஜ் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

பூண்டிமாதா பேராலய ஆண்டு திருவிழா நாளான நாளை(சனிக்கிழமை) காலை பூண்டி மாதா பேராலயத்தில் மறைந்த லூர்து சேவியர், ராயப்பர் ஆகியோர் நினைவு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

மாலை 6 மணிக்கு கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி மரியா-விசுவாசத்தின் மாதிரி என்ற தலைப்பில் திருப்பலி நிறைவேற்றுகிறார். இரவு 9.30 மணியளவில் மல்லிகை மலர் அலங்காரத்தில், வண்ண மின்விளக்குகள் ஜொலிக்க பூண்டி மாதாவின் தேர்பவனியை கும்பகோணம் பிஷப் அந்தோணிசாமி புனிதம் செய்து தொடங்கி வைக்கிறார். தேர்பவனி முடிந்ததும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியை மரியா-அனைவரின் தாய் என்ற தலைப்பில் கும்பகோணம் பிஷப் நிறைவேற்றுகிறார். அன்று மாலை  கொடி  இறக்கப்பட்டு  பூண்டிமாதா பேராலய ஆண்டு திருவிழா நிறைவுபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியானமைய இயக்குனர் சாம்சன், உதவி பங்குத்தந்தையர்கள் ஜான்சன், இனிகோ, அருளாநந்தம்,  மற்றும் பங்கு  மக்கள் செய்து வருகின்றனர். ஆண்டுவிழாவையொட்டி பேராலய வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்கு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறது. நாடெங்கிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் பூண்டி மாதா பேராலய தேர்பவனியை காண குவிந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com