அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தலாம்: இங்கிலாந்து கோர்ட்டு தீர்ப்பு

அமெரிக்கா கொடுத்த நெருக்கடிகளின் காரணமாக கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக இங்கிலாந்தில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் பதுங்கியிருந்த அசாஞ்சே கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.
ஜூலியன் அசாஞ்சே
ஜூலியன் அசாஞ்சே
Published on

லண்டன் :

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ‘ஹேக்’ செய்து விக்கி லீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா கொடுத்த நெருக்கடிகளின் காரணமாக கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக இங்கிலாந்தில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் பதுங்கியிருந்த அசாஞ்சே கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் தென்கிழக்கு லண்டனில் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அசாஞ்சேவை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி அமெரிக்கா இங்கிலாந்திடம் கோரிக்கை விடுத்தது. உளவு குற்றச்சாட்டில் ஜூலியன் அசாஞ்சேவுக்கு அதிகபட்சமாக 175 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் அமெரிக்காவிடம் தன்னை ஒப்படைக்கக் கூடாது என்று கூறி லண்டன் கோர்ட்டில் அசாஞ்சே வழக்கு தொடர்ந்தார்.

கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கை விசாரித்த லண்டன் கோர்ட்டு, அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தினால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும், மன ரீதியில் பிரச்சினைகள் ஏற்பட்டு சிறையில் அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் கூறி அவரை நாடு கடத்த அனுமதிக்க முடியாது என தீர்ப்பளித்தது. கீழ்கோர்ட்டு வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து லண்டன் மேல்முறையீட்டு கோர்ட்டில் அமெரிக்கா மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை நேற்று விசாரித்த மேல்முறையீட்டு கோர்ட்டு அசாஞ்சேவை நாடுகடத்த அனுமதிக்க முடியாது என கூறி கீழ் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. இதன் மூலம் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கான கதவு திறந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com